டொனால்டு டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசு ஆட்சியில் இருக்கும் போது பாதுகாப்பு காரணமாகவும், அமெரிக்காவில் செயல்படும் பல சீன நிறுவனங்கள் சீன ராணுவத்துடன் இயங்கி வருவதாகவும் கூறி பல சீன நிறுவனங்களைத் தடை செய்தது.
டிரம்ப் அரசு தடை செய்த பல முக்கியமான நிறுவனங்களில், உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் விற்பனை நிறுவனமான சியோமியும் ஒன்று. இதில் டிக்டாக், ஹூவாய் எனப் பல நிறுவனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தடை செய்யப்பட்ட நிறுவனங்களும், அமெரிக்க அரசும், அமெரிக்கப் பாதுகாப்புத் துறையும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் தற்போது சியோமிக்கு விடிவு காலம் பிறந்துள்ளது.
ஜோ பைடன் அரசு
அமெரிக்காவில் ஜோ பைடன் அதிபராகப் பொறுப்பேற்ற நாளில் இருந்து டிரம்ப் அரசின் பல உத்தரவுகளை ரத்துச் செய்து பல முக்கிய மாற்றங்களைச் செய்து வருகிறார். ஆனால் நீண்ட காலமாக டிரம்ப் அரசு சீன நிறுவனங்கள் மீதான தடை உத்தரவு மற்றும் கட்டுப்பாடுகளில் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தது சீன நிறுவனங்கள் மத்தியில் கவலையை அளித்தது.
சியோமி-க்கு விடுதலை
இந்நிலையில் தற்போது ஜோ பைடன் தலைமையிலான அமெரிக்க அரசு, சீனாவின் சியோமி நிறுவனத்தைத் தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கியுள்ளதாக அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் வாயிலாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
முதலீடு பெற முடியும்
தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து சியோமி நிறுவனத்தை நீக்கியதன் மூலம் சியோமி இனி எவ்விதமான தடையும் இல்லாமல் அமெரிக்கா நிறுவனங்களிடம் இருந்து முதலீட்டைப் பெற்ற முடியும், மேலும் பெற்ற முதலீட்டைத் தனது விருப்பத்தின் அடிப்படையில் முதலீடு செய்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்ய முடியும்.
சியோமி மற்றும் அமெரிக்க அரசு
நீண்ட காலமாகச் சியோமி மற்றும் அமெரிக்க அரசு மத்தியில் நடந்து வந்த பேச்சுவார்த்தை தற்போது சுமுகமாக முடிந்துள்ளது. இதனால் அடுத்தடுத்து பல சீன நிறுவனங்கள் தடை செய்யப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹாங்காங் பங்குச்சந்தை
அமெரிக்கப் பாதுகாப்புத் துறையின் அறிவிப்பு வாயிலாக ஹாங்காங் பங்குச்சந்தையில் இருக்கும் சியோமி நிறுவனத்தின் பங்குகள் 6 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களை மகிழ்வித்துள்ளது.