தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட லுலு குழுமம், தமிழகத்தில் 3,500 கோடி ரூபாய் முதலீட்டினை செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.
கேரளாவினைச் சேர்ந்த என்ஆர்ஐ ஆன எம் ஏ யூசுப் அலியின் பல்வேறு பில்லியன் டாலர் மதிப்பிலான லுலு குழுமம், தமிழகத்தில் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் 4 நாள் சுற்றுபயணமாக ஐக்கிய அரபு அமீராகம் சென்ற நிலையில், அங்கு பல்வேறு முதலீட்டாளர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார்.
லுலு குழுமத்துடன் ஒப்பந்தம்
இதற்கிடையில் தான் லுலு குழுமத்துடன் நடந்த பேச்சு வார்த்தையில் இந்த ஒப்பந்தம் திங்கட்கிழமையன்று போடப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ் நாடு தொழிற்துறை வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு பணியகத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியுமான பூஜா குல்கர்னியும், லுலு குழுமத்தின் செயல் இயக்குனர் அஷ்ரப் அலியும் கையெழுத்திட்டுள்ளனர்.
எதற்காக முதலீடு
இதன் மூலம் ஷாப்பிங் மால்கள் மற்றும் ஹைப்பர் மார்கெட்கள் மற்றும் உணவு பூங்காக்கள், லாகிஸ்டிக்ஸ் என பலவும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட ஒப்பந்தத்தின் படி முதல் ஷாப்பிங் மால் 2024ல் சென்னையில் தொடங்கும் என்றும், அதே நேரம் முதல் ஹைப்பர் மார்கெட் வளாகம் இந்த ஆண்டு இறுதியில் கோயமுத்தூர் லட்சுமி மில்ஸ் வளாகத்தில் தொடங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பல்வேறு பிரிவில் முதலீடு
லுலு குழுமம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக வேளாண் பொருட்களை கொள்முதல் செய்வதற்கும், பதப்படுத்துவதற்கும், உணவு பதப்படுத்தல் மற்றும் லாகிஸ்டிக்ஸ் மையங்களையும் அமைக்கும் என்று தெரிவித்துள்ளது.
லுலுவில் இருந்து வருகை
இந்த நிலையில் லுலு குழுமத்தில் இருந்து விரைவில் அதன் உயர்மட்ட குழுவானது, தமிழகத்திற்கு வருகை தர உள்ளதாக கூறப்படுகின்றது. அவர்கள் தமிழகத்திற்கு வரும்போது அதற்கான இடங்கள் மற்றும் அது தொடர்பான நடைமுறைகளை இறுதி செய்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பு அதிகரிக்கும்
மொத்தத்தில் லுலு குழுமத்தின் இந்த முதலீட்டினால் பல ஆயிரம் மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது உரையில் தான் முதமைச்சராக பதவியேற்றதில் இருந்து, 20,000 பேருக்கு வேலை வாய்ப்புகளை கொடுக்கும் விதமாக 124 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக கூறியிருந்தது நினைவுகூறத்தகக்து.