உலகம் முழுக்க எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்தத் துவங்கிவிட்ட நிலையில் எண்ணெய் வர்த்தகத்தை மட்டும் சார்ந்து இருக்கும் அரபு நாடுகள் அவசர அவசரமாக மாற்று வர்த்தகத்தைத் தேடி வருகிறது. இதற்காகப் பல நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில் தற்போது ஐக்கிய அரசு நாடுகள் இந்தியா உடன் புதிதாக ஒரு திட்டத்திற்காகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்தியா ஏற்கனவே ஐக்கிய அரபு நாடுகளிடம் இருந்து அதிகளவிலான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வரும் நிலையில், பிற வர்த்தகங்கள் எதுவும் இல்லாத நிலையில் இரு நாடுகள் மத்தியிலான வர்த்தக உறவை மேம்படுத்த ஐக்கிய அரபு நாடுகள் இந்தியாவிடம் முக்கியமான கோரிக்கை வைத்துள்ளது.
மத்திய கிழக்கு நாடுகள்
மத்திய கிழக்கு நாடுகள் தற்போது எண்ணெய் வர்த்தகத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் விரைவில் குறைந்து விடும் என உறுதியாக நம்பும் நிலையில், உலகில் வேகமாக வளர்ச்சி அடையும் நாடுகளுடன் வர்த்தக உறவை மேம்படுத்து வேண்டும் எனத் தீவிரமாகத் திட்டமிட்டு வருகிறது.
ஐக்கிய அரசு நாடுகள் (UAE)
இதன் ஒருபகுதியாகத் தான் தற்போது சவுதி அரேபியாவுக்கு முன்பே ஐக்கிய அரபு நாடுகள் இந்தியா உடனான வர்த்தகத்தை மேம்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஐக்கிய அரசு நாடுகள் (UAE) தற்போது இந்தியாவிடம் கச்சா எண்ணெய் இல்லாமல் சுமார் 100 பில்லியன் டாலர் அளவிலான வர்த்தகத்தை அடுத்த 5 வருடத்திற்குள் உருவாக்க வேண்டும் வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது.
ஐக்கிய அரபு நாடுகள் - இந்தியா
இதற்காக இரு நாட்டு அரசு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஐக்கிய அரபு நாடுகள் மற்றும் இந்தியா மத்தியில் நடக்கும் இந்தப் பேச்சுவார்த்தையின் மூலம் இரு நாடுகள் மத்தியில் வர்த்தகம் மேம்படுவது மட்டும் அல்லாமல் முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளும் மேம்பட உள்ளது.
இரு நாடுகளும் பேச்சுவார்த்தை
இந்த 100 பில்லியன் டாலர் வர்த்தகத்திற்காக ஐக்கிய அரபு நாட்டின் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் Thani Al Zeyoudi டெல்லியில் ஒன்றிய அரசின் வர்த்தக அமைச்சரான பியூஷ் கோயல்-ஐ சந்தித்துப் பேசியுள்ளார்.
டிசம்பர் 2021 நிறைவு
இரு நாடுகள் மத்தியிலும் வேகமாகச் செயல்பட வேண்டும் என்ற திட்டம் இருக்கும் காரணத்தால் டிசம்பர் 2021க்குள் இத்திட்டத்திற்கான முடிவுகள் திட்ட வடிவத்தில் இறுதி முடிவை எடுக்க உள்ளோம் என்றும் இதற்காக 2022 துவக்கத்தில் இரு நாடுகளும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளதாகவும் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரேபிய நாடுகள்
மத்திய கிழக்கு நாடுகள் மத்தியில் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரேபிய நாடுகள் மத்தியில் கடும் போட்டி நிலவி வரும் நிலையில், ஐக்கிய அரேபிய நாடுகள் சர்வதேச வர்த்தகத்தில் தனக்கான இடத்தை வலிமையாக்கிக்கொள்ள வேண்டும் எனப் புதிய வர்த்தக வாய்ப்புகளைத் தேடி வருகிறது.
100 பில்லியன் டாலர் வர்த்தகம்
ஐக்கிய அரபு நாடுகள் - இந்தியா மத்தியிலான 100 பில்லியன் டாலர் வர்த்தகத்தில் இந்தியாவிற்கு மிகப்பெரிய தொகை முதலீடாகக் கிடைக்க உள்ளது. இதேபோல் ஐக்கிய அரேபிய நாடுகள் கடந்த வாரம் பிரிட்டன் நாட்டில் சுமார் 14 பில்லியன் டாலர் அளவிலான தொகையை முதலீடு செய்யப் பேச்சுவார்த்தை நடத்தியது.