ஒரு காலத்தில் டாக்ஸி என்பது மிகவும் ஆடம்பர சேவையாகவும் பணக்காரர்களுக்கு மட்டுமானதாக இருந்தது நாம் யாரும் மறந்திருக்க முடியாது. சொல்லப்போனால் வெளிநாட்டில் இருந்து திரும்பி வரும் இந்தியர்களும், வெளிநாட்டு பயணிகளும் மட்டும் தான் இந்தக் கார் டாக்ஸியை பயன்படுத்துபவர்களாக இருந்தனர். ஆனால் இன்று யார் வேண்டுமானாலும் எவ்வளவு பெரிய கார் வேண்டுமானாலும் டாக்ஸியாகப் பெற முடியும், அதுவும் குறைந்த கட்டணத்தில்.
இந்த மிகப்பெரிய மாற்றம் எங்குத் துவங்கியது என்றால் இந்தியாவில் இல்லை, அமெரிக்காவில். ஆம் அமெரிக்காவில் கிட்டதட்ட 10 வருடத்திற்கு முன்பு உபர் என்கிற ஆன்லைன் மூலம் டாக்ஸி புக்கிங் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் இது வேடிக்கையான விஷயமாக இருந்தாலும் பின்னாளில் ஒவ்வொரு அமெரிக்கர்களின் அத்தியாவசியமான விஷயமாக மாறியது என்றால் மறுக்க முடியாது.
இந்த மாபெரும் நிறுவனத்தை உருவாக்கிய இந்நிறுவனத்தின் தலைவர் டிராவிஸ் கலாநிக் தற்போது பல்வேறு காரணங்களுக்காக மொத்தமாக நிறுவனத்தை விட்டே வெளியேறியுள்ளார்.
டிராவிஸ் கலாநிக்
உபர் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான டிராவிஸ் கலாநிக் பல்வேறு நிர்வாகப் பிரச்சனை மற்றும் முதலீட்டாளர்களின் நெருக்கடியின் காரணமாக நேரடி நிர்வாகத்தில் இருந்து 2017ஆம் ஆண்டு விலகி தனது சீஇஓ பதவியை Dara Khosrowshahi-க்கு கொடுத்தார்.
அதன் பின்னர் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக மட்டும் இருந்தார்.
பங்குச்சந்தையில் உபர்
இப்படிப் பல நிர்வாக மாற்றங்களைச் சந்தித்த உபர், 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் வெற்றிகரமாக 30 நிதி அமைப்புகளுடன் இணைந்து அமெரிக்கப் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. பட்டியலிட்ட முதல் நாளிலேயே 11 சதவீதம் சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதன் பின்பு தான் முதலீட்டாளர் மனதில் இடி விழுவது போல் 2019ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 1 பில்லியன் டாலர் நஷ்டம் அடைந்ததாகக் காலாண்டு அறிக்கை வெளியிட்டது.
தொடர் பங்கு விற்பனை
இப்படி மொத்த தோல்வியாக இருந்த நிலையில் நிர்வாகக் குழுவில் மட்டும் இருந்த டிராவிஸ் கலாநிக் தன்னிடம் இருந்த உபர் பங்குகளைத் தொடர்ந்து விற்பனை செய்யத் துவங்கினார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 383 மில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து தனது மொத்த உபர் பங்கு இருப்பை 10 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைத்துக்கொண்டார்.
இப்படி மொத்தமாக இதுவரை டிராவிஸ் கலாநிக் 3 பில்லியன் டாலர் அளவிலான உபர் பங்குகளை விற்பனை செய்துள்ளார்.
வெளியேற்றம்
பங்கு இருப்பு அளவு குறைந்ததாலும், புதிய தொழில் கவனம் செலுத்துவதற்காகவும் தற்போது டிராவிஸ் கலாநிக் மொத்தமாக உபர் நிறுவனத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இவர் டிசம்பர் 31ஆம் தேதி முதல் உபர் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் இருந்து வெளியேறும் நிலையில், இனி உபர் நிறுவனத்திற்கும் இவருக்குப் பங்குதாரர் என்ற ஒன்றை உறவு மட்டுமே இருக்கும், வேறு எவ்விதமான நிர்வாகப் பணிகளிலும் டிராவிஸ் ஈடுபடமாட்டார்.
புது வர்த்தகம்
டிராவிஸ் கலாநிக் உபர் நிறுவனத்தில் இருந்து வெளியேற திட்டமிட்டபோதே உலகளவில் தற்போது பேசப்பட்டு வரும் கிளவுட்கிட்சன் திட்டத்தில் பெரிய அளவில் இறங்க திட்டமிட்டுள்ளார்.
இந்த வகை ஹோட்டகள் ஆன்லைன் டெலிவரிக்காக மட்டுமே இயக்கப்படும். இங்குச் சென்று யாரும் ஆர்டர் செய்ய முடியாது, உட்கார்ந்து சாப்பிட முடியாது. ஆனால் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால் டெலிவரி மட்டும் செய்யப்படும். அது உபர் நிறுவனத்திற்கானது மட்டும் அல்ல எல்லா உணவு டெலிவரிக்கு இத்தகைய கிளவுட்கிட்சன் சேவை அளிக்கும்.
ஆயிரம் இருந்தாலும் தான் உருவாக்கிய நிறுவனத்தில் இருந்து வெளியேறுவது என்பது மிகவும் கஷ்டமான ஒரு விஷயம்.