இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது ஊரடங்கு நான்காவது கட்டத்தினை எட்டியுள்ளது. எனினும் இந்த முறை சில அத்தியாவசியம் தவிர பிற சேவைகளுக்கும் சற்று தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சில நகரங்கள் தவிர ஓலா மற்றும் உபெர் உள்ளிட்ட வாகன சேவை நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன.
ஆனாலும் இதுவரை லாக்டவுனால் முடங்கியிருந்த ஆன்லைன் வாகன சேவையினால், உபெர், ஓலா உள்ளிட்ட நிறுவனங்கள் பெரும் இழப்பினை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் விளைவாக ஓலா நிறுவனம் சில தினங்களுக்கு முன்பு தனது ஊழியர்களில் கணிசமான அளவு பணி நீக்கம் செய்தது.
இதற்கிடையில் தற்போது உபெர் இந்தியா நிறுவனமும் 600 பேரை பணி நீக்கம் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் கொரோனாவின் தாக்கத்தினால் உபெர் இந்தியா கணிக்க முடியாத அளவு பின்னடைவை சந்தித்துள்ளதாக கூறியுள்ளது. இதன் காரணமாக பணி நீக்கம் செய்வதை தவிர வேறு வழியில்லை என்றும் உபெர் கூறியுள்ளது.
இதனால் அதன் மொத்த ஊழியர்களில் 600 பேரினை பணி நீக்கம் செய்துள்ளதாகவும், தெற்காசியாவின் தலைவர் பிரதீப் பரமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் உபெர் குடும்பத்தினரையும், எங்கள் சகாக்களையும், நிறுவனத்தில் இருந்து வெளியேறும் அனைவருக்கும் இது சோகமான நாள். நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். மேலும் அவர்களுக்கு எனது நன்றியை கூற விரும்புகிறேன் என்றும் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
இவ்வாறு பணி நீக்கம் மூலம் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு அடுத்த 10 வாரங்களுக்கு தொகை கொடுக்கப்படும் என்றும் உபெர் கூறியுள்ளது. எனினும் அது எவ்வளவு என்ற விவரங்கள் கொடுக்கப்படவில்லை. அதோடு அடுத்த ஆறு மாதங்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் தொகையும் கவர் செய்யும். லேப்டாப்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படும் என்றும் உபெர் தெரிவித்துள்ளது.
உபெர் மட்டும் அல்ல, பல ஸ்டார்டப் நிறுவனங்கள் தொடர்ந்து, கடந்த சில வாரங்களாகவே பணி நீக்கம் செய்து வருகின்றன. குறிப்பாக ஓலா, சோமேட்டோ, உபெர் இந்தியா, ஷேர்சாட், ஸ்விக்கி, உடான், லைவ்ஸ்பேஷ், லெண்டிங் கார்ட், பேடிஎம் உள்ளிட்ட நிறுவனங்களும் பணி நீக்கம் செய்துள்ளன.