Recommended Video
டெல்லி: இன்றைய நகர இளைஞர்களுக்கு பலருக்கு நினைத்த நேரத்தில், நினைத்த உணவகத்தில். விரும்பிய உணவை சாப்பிட வாய்ப்பளித்த உபெர் ஈட்ஸ் நிறுவனத்தினை அறிந்திடாத இன்றைய இளம் தலைமுறையினர் இருப்பது கடினம்.
அதிலும் இன்றைய நாளில் நகரப் பகுதிகளில் குடும்பம் குடும்பமாக ஆன்லைன் உணவு டெலிவரி ஆப் மூலம், உணவு ஆர்டர் செய்வதை நாம் கண் கூடாக காண முடிகிறது.
சொல்லப்போனால் பலருக்கு உணவளித்த உபெர் ஈட்ஸை தெரியாதவர் இருக்கவே முடியாது என்றே கூறலாம்.
ஆரம்பிக்கப்பட்டது எப்போது?
கடந்த 2017, ஆண்டில் நடுப்பகுதியில், இந்தியாவில் தனது காலை ஊன்றியது உபெர் ஈட்ஸ். இந்த நிலையில் இத்துறையில் அதிகரித்து வரும் போட்டி, நிலவி வரும் மந்தநிலை என பல பிரச்சனைகளால் இந்த நிறுவனம் வீழ்ச்சி கண்டு வருவதாக கூறப்பட்டது. இதனால் இந்தியாவில் உள்ள தனது வர்த்தகத்தை சோமேட்டோவிடம் விற்று விட்டதாக கூறப்படுகிறது.
சோமேட்டோ வாங்கியதா?
இது குறித்து செவ்வாய்கிழமையன்று சோமேட்டோவின் தலைமை செயல் அதிகாரியான தீபிந்தர் கோயல், இந்தியாவில் உள்ள உபெரின் உணவு வினியோக வர்த்தகத்தத்தை சோமேட்டோ வாங்கியுள்ளதாக தெரித்துள்ளார். மேலும் இந்த உணவு வினியோக தளத்தில் உபெருக்கு 9.99% பங்கு இருக்கும் என்றும் அறிவித்துள்ளார்.
சேவை நிறுத்தம்
சோமேட்டோ நிறுவனம் உபெரின் பங்குகளை வாங்கிய நிலையில், இன்று முதல் உபெர் ஈட்ஸின் செயல்பாடுகள், நேரடி உணவகங்கள், வினியோக பார்ட்னர்கள், உபெர் ஈட்ஸ் பயனர்கள் சோமேட்டோவிற்கு மாற்றப்படுவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
விற்பனை எவ்வளவுக்கு?
உபெர் ஈட்ஸ் சோமேட்டோ ஒப்பந்தத்தின் மதிப்பானது 300 - 350 மில்லியன் டாலர் இருக்கலாம் என்றும் இது பற்றி அறிந்த நெருக்கமான அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதன் இன்றைய இந்திய மதிப்பு தோரயமாக 2480 கோடி ரூபாயாகும்.
யாருக்கெல்லாம் பாதிப்பு?
உபெர் ஈட்ஸ்-சை சோமேட்டோ நிறுவனம் வாங்கியுள்ள நிலையில், உபெரில் பணி புரிந்த 245 ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது. எவ்வாறயினும் அவர்கள் மார்ச் 31 வரை அவர்கள் சம்பள பட்டியியலில் இருப்பதாகவும் உபெர் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு மட்டுமே ஒப்பந்தம் செல்லும்
உபெருக்கும் சோமேட்டோவுக்கும் இடையேயான இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பங்களாதேஷ் மற்றும் இலங்கையில் உபெர் தொடர்ந்து செயல்படும் என்றும் கூறப்படுகிறது. உணவு வணிகத்தை கைவிட்டாலும், இந்தியாவில் ரைட்ஸ் வணிகத்தை தொடர்ந்து செய்வோம் என்றும் உபெர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சோமேட்டோ என்ன சொல்கிறது
உணவு டெலிவரி வணிகத்தில் நாங்கள் முன்னோடியாக இருப்பதற்கும், இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட நகரங்களில், ஒரு முன்னணி உணவு வினியோகத்தை உருவாக்கியதற்கும் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்த கையக்கப்படுத்தலானது கணிசமான அளவு எங்களை வலுப்படுத்துகிறது என்றும் தீபிந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.
ரைட்ஸ் வர்த்தகத்தில் கவனம்
இந்தியாவில் இருந்து தனது உணவு டெலிவரி வணிகத்தை நிறுத்திக் கொண்டாலும், தனது ரைட்ஸ் வணிகத்தில் தொடர்ந்து உபெர் கவனம் செலுத்தும். மேலும் இந்த ஆண்டு 50 நகரங்களிலிருந்து 200 நகரங்களுக்கு இதை விரிவுபடுத்தும் என்றும் உபெர் அறிவித்துள்ளது.
இந்தியா முக்கிய சந்தை
இந்தியா உபெருக்கு முக்கிய சந்தையாக உள்ளது. ஆக நாங்கள் உள்ளூர் வணிக சவாரிகளை வளர்ப்பதில் தொடர்ந்து முதலீடு செய்வோம். மூலதன திறமையால் மிக வேகமாக வளரக்கூடிய சோமேட்டோவால் நாங்கள் ஈர்க்கப்பட்டோம். ஆக சோமேட்டோ மேலும் வளர வெற்றி பெற விரும்புகிறோம் என்றும் உபெரின் தலைமை நிர்வாக அதிகாரி தார கோஸ்ரோஷாஹி கூறியுள்ளார்.
ஸ்விக்கிக்கு மேலும் அழுத்தம்
உபெரின் பங்கு விற்பனையால் சோமேட்டோ மேலும் வலுப்பெறும் எனறும் கூறப்படுகிறது. இதனால் மற்றொரு உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி அழுத்தம் காணலாம் என்றும் எதிர்பர்க்கப்படுகிறது. சொல்லப்போனால் சோமேட்டோ இன்னும் கொஞ்சம் மேலே செல்லலாம் என்றும், இது ஸ்விக்கியை கீழ் நோக்கி தள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.