இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, உணவு பொருட்கள் முதல் உற்பத்தி பொருட்கள் வரையில் அனைத்தின் விலையும் அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் போக்குவரத்து சேவை நிறுவனங்கள் மட்டும் என்ன விதிவிலக்கா.
கடந்த ஒரு மாதமாகவே இந்தியாவின் முன்னணி ஆன்லைன் டாக்ஸி சேவை நிறுவனங்கள் எரிபொருள் விலை உயர்வால் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க வேறு வழியில்லாமல் ஓலா மற்றும் உபர் நிறுவனங்கள் கட்டணத்தை அதிகரித்துள்ளது.
பெட்ரோல், டீசல் விலை
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஓலா, உபர் ஓட்டுநர்களுக்குக் கிடைக்கும் வருமானம் பெரிய அளவில் குறைந்துள்ளது. இந்த நிலையில் ஓலா, உபர் நிறுவனங்கள் டிரைவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் டிரிப்களை ரத்து செய்து விட்டு, அதே வாடிக்கையாளர்களுக்கு டாக்ஸி சேவை அளித்தனர். இதனால் ஓட்டுநர்கள் ஓலா, உபர் நிறுவனத்திற்கு அளிக்க வேண்டிய கமிஷன் குறைகிறது.
ஓலா, உபர் ஓட்டுநர்கள்
இன்னும் சில ஓலா, உபர் ஓட்டுநர்கள் பயணக் கட்டணத்தைத் தாண்டி 50 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையில் கூடுதலாகக் கொடுத்தால் தான் சேவை அளிப்பதாகவும் கூறினர். இத்தகைய பிரச்சனை பெரும்பாலான நகரங்களில் இருந்தது, இதனால் ஓலா, உபர் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்தது மட்டும் அல்லாமல் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை இழந்தது.
கட்டண உயர்வு
இந்த நிலையைச் சமாளிக்க வேண்டும் என்பதற்காக டாக்ஸி ஓட்டுநர்களிடம் ஆலோசனை செய்த பின்பு கட்டணத்தை உயர்த்தி, ஓட்டுநர்களுக்கு எரிபொருள் விலை உயர்வின் மூலம் ஏற்பட்ட பாதிப்பைக் குறைக்க முன்வந்துள்ளது. இதன் படி நாட்டின் முன்னணி நகரங்களில் ஓலா, உபர் தனது டாக்சி கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
12-15 சதவீதம் உயர்வு
உபர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டின் பெரும்பாலான இடத்தில் எரிபொருள் விலை 100 ரூபாயைத் தாண்டிய நிலையில் டெல்லி- என்சிஆர், கொல்கத்தா பகுதியில் டாக்ஸி கட்டணத்தை 12 சதவீதமும், மும்பை, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் 15 சதவீதமும் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
எரிபொருள் விலை மாற்றங்கள்
அடுத்தச் சில வாரத்தில் எரிபொருள் விலை மாற்றங்களைக் கவனித்து உரிய மாற்றங்களைச் செய்ய உபர் இந்தியாவின் சென்டரல் ஆப்ரேஷன்ஸ் தலைவர் நிதிஷ் புஷன் தெரிவித்துள்ளார்.
ஓலா
இதேபோல் ஓலா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாத நிலையில், ஹைதராபாத் டாக்ஸி ஓட்டுநர்களுக்கு ஓலா அனுப்பிய ஈமெயிலில் மினி மற்றும் ப்ரைம் சேவைகளுக்கான கட்டணத்தை 16 சதவீதம் வரையில் உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது எக்னாமிக் டைம்ஸ். மேலும் ஓலா நாட்டின் பிற பகுதியிலும் டாக்ஸி சேவை கட்டணத்தை உயர்த்தியுள்ளதாகவே தெரிகிறது.