இந்தியாவில் எப்படி ஈகாமர்ஸ் துறை மக்களை அதிகளவில் கவர்ந்து வேகமாக வளர்ந்ததோ அதேபோலத் தான் ஆன்லைன் டாக்ஸி சேவையும். ஒரு காலத்தில் கார் வாடகை எடுப்பது என்றாலே மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்டது, ஆனால் இப்போது கடலை மிட்டாய் வாங்குவது போல் ஆகிவிட்டது.
அமெரிக்க ஆன்லைன் டாக்ஸி நிறுவனமான உபர் பல்வேறு வர்த்தகச் சிக்கல்கள் மத்தியில் தனது உணவு டெலிவரி செய்யும் உபர் ஈட்ஸ் வர்த்தகத்தை முழுமையாகச் சோமேட்டோ நிறுவனத்திற்கு விற்பனை செய்தது. இந்நிலையில் இந்தியாவில் தனது வர்த்தகத்தை மேம்படுத்தவும் ஓலா உடன் போட்டிப் போடவும் புதிய வர்த்தகத்தில் இறங்கத் திட்டமிட்டுள்ளது.
புதிய வர்த்தகம்
உபர் நிறுவனம் இந்தியாவில் அடுத்தச் சில மாதத்தில் self-driving கார் ரென்டல் மற்றும் பஸ் ஷட்டில் வர்த்தக்ததை மிகப்பெரிய அளவில் செய்ய முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் self-driving கார் ரென்டல் சேவையில் ஏற்கனவே ஜூம்கார், ரெவ் எனப் பல நிறுவனங்கள் இருக்கும் நிலையில் உபர்-ன் வருகை இத்துறை வர்த்தகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படும் எனத் தெரிகிறது. அதேபோல் சில பெரு நகரங்களில் மட்டுமே இருக்கும் பஸ் ஷட்டில் சேவையை உபர் இந்தியா முழுக்க அறிமுகம் செய்யத் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது.
விரிவாக்கம்
அமெரிக்க நிறுவனமான உபர், தற்போது தனது தலைமை நிர்வாகம் மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் பிரச்சனைகளைச் சந்தித்து வரும் நிலையில் இந்தியாவில் விற்பனை செய்த உணவு டெலிவரி வர்த்தகத்தில் கிடைத்த பணத்தை இந்தியாவிலேயே முதலீடு செய்யத் திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது. இதன் காரணமாகத் தான் இப்புதிய இரு வர்த்தகத்தை உபர் இந்தியா அறிவித்துள்ளதாகத் தெரிகிறது.
ஊழியர்கள்
உபர் இந்தியா, ஏற்கனவே self-driving கார் ரென்டல் மற்றும் பஸ் ஷட்டில் வர்த்தகத்தைத் துவங்கவும், அடுத்தடுத்து நகரங்களுக்கு விரிவாக்கம் செய்யும் அளவிற்குப் பெரிய திட்டமிடல் உடன் பெரிய அணியை உருவாக்கியுள்ளது.
இதனால் உபர் எப்போது வேண்டுமானாலும் தனது புதிய வர்த்தகத்தை அறிமுகம் செய்யும்.
கூட்டணி
self-driving கார் ரென்டல் சேவைக்காக உபர் தற்போது இத்துறையில் முன்னணி நிறுவனமாக இருக்கும் டிரைவ்சி, ஜூம்கார், ரெவ் ஆகிய நிறுவனங்களுடன் கூட்டணி வைத்துள்ளது. இவர்கள் உபர் வாடிக்கையாளர்களுக்கு வாகனங்களைப் புக்கிங்-க்கு ஏற்றவாறு சேவை அளிக்கும்.
ஓலா
உபர் நிறுவனம் தனது டாக்ஸி சேவையை விரிவாக்கம் செய்யாமல் புதிய வர்த்தகத்திற்குள் நுழைந்துள்ளதால் ஓலா நிறுவனத்திற்கு இது பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தாது. இதனால் ஓலாவிற்க எவ்விதமான பாதிப்பும் இல்லாமல் தப்பித்துக்கொண்டது.