புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடி, காதி பயன்படுத்துவதை ஆதரித்துப் பேசியதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக மானிய ஆணைய சுற்றறிக்கையில், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தங்களுடைய சிறப்பான தருணங்களில், இந்தியாவின் பாரம்பரிய உடைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டார்கள்.
காதி மற்றும் பிற கைத்தறி நெசவு ஆடைகளை உடுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்கச் சொல்லி இருக்கிறது இந்த யூ ஜி சி சுற்றறிக்கை. காதி மற்றும் கைவினை ஆடைகளை உடுத்துவதால் கிடைக்கும் நன்மைகளுக்கு இடையில் ஒரு "பெருமித உணர்வையும்" இந்த ஆடைகள் கொடுப்பதாகவும் சொல்கிறது.
"மாண்புமிகு பிரதமர் காதியைப் பயன்படுத்துவதை ஆதரித்தார், மேலும் கைத்தறிக்கு புத்துயிர் கொடுக்கச் சொல்லியும் வலியுறுத்தினார். மகாத்மா காந்தி இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது, தன் கைத் தறி துணியை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தினார், எனவே இது சுதந்திரத்தின் சீராடையாக பார்க்கப்படுகிறது. காதி மற்றும் பிற கைத்தறி ஆடைகளைப் பயன்படுத்துவது, இந்தியராக இருப்பதற்கான பெருமையைத் தருவது மட்டுமல்லாமல், இந்தியாவின் தட்ப வெப்ப நிலைக்கு தகுந்ததாகவும் இருக்கிறது" எனச் சொல்லி இருக்கிறது இந்த யூ ஜி சி சுற்றறிக்கை.
இந்த சுற்றறிக்கை, நம் இந்திய நாட்டில் இருக்கும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் அனுப்பி இருப்பதாகவும் சொல்கிறது யூ ஜி சி தரப்பு. இந்தியாவில் சுமாராக 50,000 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த 50,000 கல்லூரிகளுக்கும் காதி ஆடைகளைப் பயன்படுத்தச் சொல்லி சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறார்களாம்.
சமீப காலமாக, இந்தியாவின் கல்லூரிகளில், பட்டமளிப்பு விழாக்களில், பாரம்பரிய ஆடைகளை பயன்படுத்துவது தொடர்பாக கோரிக்கைகளும், சர்ச்சைகளும் எழுந்து கொண்டே தான் இருக்கின்றன என்பதும் இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது. இப்போது கடைசியாக யூ ஜி சி அமைப்பே அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு சுற்றறிக்கை கொடுக்கும் அளவுக்கு வந்துவிட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
ஏற்கனவே ஐஐடி சென்னை, ஐஐடி மும்பை, குஜராத் பல்கலைக்கழகம், என் ஐ டி ஹமிர்பூர் போன்ற கல்லூரிகள், தங்களின் பட்டமளிப்பு விழா ஆடையாக காதியை மாற்றி இருக்கிறார்கள் என்பதும் இந்த இடத்தில் கவனிக்க வேண்டி இருக்கிறது. இதனால் காதி மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு கொஞ்சமாவது வியாபாரம் பெருகும் என எதிர்பார்க்கலாம்.