பிரிட்டன் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு அடுத்த ஆண்டு மே 8 ஆம் தேதி பிரிட்டன் நாட்டு வங்கிகளுக்குச் சிறப்பு விடுமுறை அறிவித்துள்ளார் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்.
மே 6 ஆம் தேதி வெஸ்ட்மின்ஸ்டர் தேவாலயத்தில் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா நடைபெற உள்ளது, இந்த வரலாற்று நிகழ்வை அங்கீகரிக்கும் வகையில் தற்போது பிரதமர் ரிஷி சுனக் அந்நாட்டு வங்கிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புத் தற்போது பிரிட்டன் மக்கள் மற்றும் அமைச்சர்கள் மத்தியில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
பிரிட்டன் சார்லஸ் மன்னர்
பிரிட்டன் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா அந்நாட்டு மக்களுக்கும், வரலாற்றிலும் மிகவும் முக்கியமான நிகழ்வு, எலிசபெத் மகாராணி மறைந்த பிறகு மூன்றாம் சார்லஸ் மன்னர் அரசர் ஆகியுள்ள நிலையில், அவருக்கு முடிசூட்டு விழா நடக்க உள்ளது. இதை முன்னிட்டு அடுத்த ஆண்டு மே 8 ஆம் தேதி பிரிட்டன் வங்கிகளுக்குப் பெரும் ஆலோசனை மற்றும் விவாதத்திற்குப் பின் சிறப்பு விடுமுறை அறிவித்தார் ரிஷி சுனக்.
ரிஷி சுனக்
இந்த விடுமுறை அறிவிக்கும் முன் ரிஷி சுனக் மற்றும் அவருடைய நிர்வாகக் குழு மே 1 வங்கி விடுமுறையை மாற்றலாமா அல்லது இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் கூடுதல் விடுமுறையை உருவாக்கலாமா என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே முக்கியமான விவாதம் நடைபெற்றது.
1 பில்லியன் பவுண்டு
இந்தப் பெரும் விவாதத்திற்குப் பின்பு கூடுதல் விடுமுறையை அளிக்க ரிஷி சுனக் அரசு முடிவு செய்தது. ஆனால் ஒரு கூடுதல் நாள் விடுமுறையானது பிரிட்டன் நாட்டின் பொருளாதாரத்திற்கு 1 பில்லியன் பவுண்டுகளுக்கு மேல் செலவாகும் எனப் பல அறிக்கைகள் வெளியான பின்பும் இந்தக் கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டுப் பின்பும் இத்தகைய அறிவிப்பு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
முடிசூட்டு விழா
இதுகுறித்து ரிஷி சுனக் கூறுகையில், கூடுதல் வங்கி விடுமுறை மூலம் நாடு முழுவதும் உள்ள மக்கள் தங்கள் குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் உடன் ஒன்றிணைய ஒரு வாய்ப்பாக இருக்கும். புதிய மன்னரின் முடிசூட்டு விழா நமது நாட்டிற்கு ஒரு முக்கிமானத் தருணம். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை அங்கீகரிக்கும் வகையில், அடுத்த ஆண்டு முழு இங்கிலாந்து வங்கிகளுக்குக் கூடுதல் விடுமுறையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் எனத் தெரிவித்தார்.
ராணி எலிசபெத்
இதேபோன்ற விடுமுறை 1953 இல் ராணி இரண்டாம் எலிசபெத் -இன் முடிசூட்டு விழாவிற்காக அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பிரிட்டன் நாட்டில் ஏற்கனவே மே 1 மற்றும் 29 ஆம் தேதி பொது விடுமுறையாக இருக்கும் நிலையில் பிரிட்டன் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழாவை முன்னிட்டு மே 8 ஆம் தேதி விடுமுறை அளிப்பதன் மூலம் 3 நாள் விடுமுறையாக உள்ளது.
பிரிட்டன் அரசு குடும்பம்
பிரிட்டன் அரசு ஒவ்வொரு ஆண்டும் பிரிட்டன் அரசு குடும்பத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகை அளித்து வருகிறது. பிரிட்டன் நாட்டின் மக்களின் வரிப் பணத்தில் இருந்து ஒரு பகுதியைப் பிரிட்டன் அரசு Sovereign Grant ஆகப் பிரிட்டன் அரசு குடும்பத்திற்கு வருடாந்திர அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.
Sovereign Grant தொகை
பிரிட்டன் அரசு குடும்பத்திற்கு வழங்கப்படம் நிதியை முதலில் Civil List என அழைக்கப்பட்டு வந்தது, 2012ல் இதை Sovereign Grant ஆகப் பிரிட்டன் அரசு மாற்றியது குறிப்பிடத்தக்கது. இப்படிப் பிரிட்டன் அரசு குடும்பம் 2021- 2022 காலக்கடத்தில் பிரிட்டன் அரசிடம் இருந்து சுமார் 86 மில்லயன் பவுண்ட் பெற்றது.