ரஷ்யா - உக்ரைன் இடையேயான பதற்றமானது இனியும் நீடிக்குமா? அடுத்து என்ன நடக்குமோ என்ற அச்சத்திற்கு இடையில், ஏற்கனவே ரஷ்யாவில் இருந்து பல டெக் நிறுவனங்கள் வெளியேறத் தொடங்கியுள்ளன.
சில தினங்களுக்கு முன்பு மைக்ரோசாப்ட், கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள், இனி ரஷ்யாவுடன் புதிய ஒப்பந்தங்களை போடாது என அறிவித்துள்ளது.
எனினும் தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளன.
ரஷ்யாவில் இருந்து வெளியேறலாம்
இதற்கிடையில் அசென்சர் மற்றும் ஐபிஎம் உள்ளிட்ட சில டெக் ஜாம்பவான்களும் ரஷ்யாவில் இருந்து வெளியேறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே உக்ரைனில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உக்ரைனில் இருந்தும் சில நிறுவனங்கள் தங்களது வணிகத்தினை தென் கிழக்கு ஆசிய நாடுகளுக்கு மாற்றலாம். குறிப்பாக இந்தியாவுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் வாய்ப்புகள் கிடைக்கலாம்
குறிப்பாக உக்ரைனில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், இந்திய டெக் நிறுவனங்களுக்கு இன்னும் கூடுதல் வணிக வாய்ப்புகள் கிடைக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
உக்ரைனில் இந்திய ஐடி நிறுவனங்கள் சிறிய அளவில் வணிகம் செய்து வருகின்றன. அதோடு போலந்து, ரோமானியா, ஹங்கேரி உள்ளிட்ட அண்டை நாடுகளிலும் சேவை செய்து வருகின்றன. எனினும் உக்ரைனை பொறுத்தவரையில் சர்வதேச ஐடி நிறுவனங்களான Epam, Globallogic, softserve உள்ளிட்ட நிறுவனங்கள் கணிசமான அளவில் சேவை செய்து வருகின்றன.
வணிக மாற்றம்
அமெரிக்காவினை தலைமையிடமாகக் கொண்ட Epam, உக்ரைனில் 12,500க்கும் மேற்பட்ட பணியாளர்களை கொண்டுள்ளது. இந்த நிறுவனம் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில், முதல் காலாண்டு வளர்ச்சி விகிதம் குறித்த கணிப்பினை திரும்ப பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனம் ரிஸ்க் குறைவான அண்டை நாடுகளுக்கு தங்களது வணிகத்தினை மாற்றியமைக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பணியமர்த்தல்
குறிப்பாக மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட இடங்களில் விரிவாக்கம் செய்யப்படலாம் என்றும், இதற்காக மேற்கண்ட இடங்களில் பணியமர்த்தலை அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் எவரெஸ்ட் ஆய்வு நிறுவனம் சமீபத்திய அறிக்கை ஒன்றில், நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், இந்தியாவுக்கு அவுட்சோர்ஸிங் பணிகள் அதிகம் கிடைக்கலாம் என கூறியுள்ளது. நிச்சயம் இதன் மூலம் இந்திய நிறுவனங்களுக்கு கணிசமான ஒப்பந்தங்களை கொடுக்கலாம். இதன் மூலம் இந்திய ஐடி ஊழியர்களுக்கும் வாய்ப்புகள் கிடைக்கலாம்.