உக்ரைன் - ரஷ்யா இடையேயான பதற்றத்தின் மத்தியில் கச்சா எண்ணெய் விலையானது உச்சம் தொட்டு வருகின்றது. இந்த நிலையில் இது குறித்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து சிஎன்பிசி அளித்த இண்டர்வியூவில், ரஷ்யா உக்ரைன் பதற்றத்தின் மத்தியில் கச்சா எண்ணெய் மற்றும் கேஸ் மட்டும் அல்ல, மற்ற கமாடிட்டிகளின் விலையும் அதிகரிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
தற்போது தான் கொரோனாவில் இருந்து பொருளாதாரம் மீண்டு வரத் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா காலத்தில் போடப்பட்டிருந்த லாக்டவுன் காரணமாக சப்ளை சங்கிலியில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.
பதற்றத்தால் பிரச்சனை அதிகரிக்கலாம்
இந்த பிரச்சனை காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் இன்றும் பற்றாக்குறையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் தற்போது ரஷ்யா - உக்ரைன் பதற்றமானது மேலும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த இரு நாடுகளின் பதற்றத்தின் மத்தியில், பற்றாக்குறை மேற்கொண்டு அதிகரிக்கலாம்.
பெரும் இடைவெளி
ஏற்கனவே தேவைக்கும் இருப்புக்கும் இடையே பெரும் இடைவெளி இருந்து வருகின்றது. இந்த நிலையில் தேவைக்கு ஏற்ப சப்ளை செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த பதற்றத்தின் மத்தியில் உலகம் முழுவதுமே கச்சா எண்ணெய் விலை மற்றும் கேஸ் விலை உயரலாம் என்ற அச்சம் இருந்து வருகின்றது. குறிப்பாக இயற்கை எரிவாயு சப்ளை குறித்த கவலை இருந்து வருகின்றது. இந்த நிலையில் ரஷ்யா - உக்ரைன் பதற்றமானது மேற்கொண்டு சப்ளையை பாதிக்கும்.
உற்பத்தி அதிகரிக்கலாம்
ஓபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியினை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். அதனுடன் ஈரானும் உற்பத்தியினை அதிகரித்தால் அதன் மூலம் சப்ளையை அதிகரிக்க முடியும். ஆனால் உக்ரைன் - ரஷ்யா பிரச்சனையானது கோதுமை உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் சப்ளையை பாதிக்கும். உலகளவில் கோதுமை ஏற்றுமதியில் ரஷ்யாவும், உக்ரைனும் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆக இதன் விலையும் உயரக்கூடும் என ராஜன் கூறியுள்ளார்.
வட்டி விகிதம் என்னவாகும்?
இதே அமெரிக்காவின் வட்டி விகிதம் குறித்து பேசியவர், அமெரிக்க வட்டி விகிதத்தினை அதிகரிக்கும் நிலையில் உள்ளது. பணவீக்கத்தினை சம நிலைப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. பணவீக்கம் குறைவாக இருந்தால் பிரச்சனை இருக்காது. ஆனால் அமெரிக்காவில் பணவீக்கம் என்பது தொடர்ந்து உச்சத்தில் இருந்து வருகின்றது. அதனை சம நிலைப்படுத்த வேண்டிய நிலையில் அமெரிக்கா உள்ளது. இதன் காரணமாக அடுத்த மாதம் நடக்கவிருக்கும் கூட்டத்தில் அதன் மத்திய வங்கியின் கொள்கைகள் கடுமையாக்கப்படலாம் என்றும் கூறியுள்ளார்.