இந்தியாவில் மின்சார வாகன சந்தை நாளுக்கு நாள் விரிவடைந்து வருகிறது. மக்கள் மத்தியில் மின்சார வாகனக்களுக்கு டிமாண்ட் அதிகமாகியுள்ளது. இந்நிலையில் இந்தியாவின் முக்கியமான மின்சார வாகன உற்பத்தி மையமாக ஓசூர் மாறி வருகிறது.
இந்தியாவின் முன்னணி எலக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான அல்ட்ரா வயலட் ஆட்டோமோட்டிவ் (Ultraviolette Automotive) நிறுவனம் ஓசூரில் மிகப்பெரிய முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் தனது உற்பத்தி திறனை பன்மடங்கு உயர்த்தும் நோக்கில் அடுத்த 5 ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக 1,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் இந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகன ஸ்டார்ட்அப் நிறுவனம், தமிழகத்தின் ஓசூர் பகுதியில் உள்ள சூலகிரி சிப்காட்டில் தனது புதிய வாகன உற்பத்தி ஆலையை அமைக்கவுள்ளது. ஓசுரில் அமைய உள்ள புதிய உற்பத்தி ஆலைக்காக 800 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக கூறுகிறது.
ஓசூரில் அமைக்கப்படும் இந்த புதிய ஆலைக்கு BIGGA Factory (Big Global Ambition Factory) என பெயரிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, இந்த ஆலை ஆண்டுக்கு 2,50,000 எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் திறனுடன் தொடங்கப்படவுள்ளது. எதிர்காலத்தில் சந்தையில் எலக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவை அதிகரிக்கும்போது, இதன் உற்பத்தியை ஆண்டுக்கு 5,00,000 வாகனங்கள் வரை உயர்த்துவதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் கொண்டுவரப்படுமாம்.
இந்த ஆலையின் முதல் கட்டப் பணிகள் முடிந்து, அதன் முழு உற்பத்தி திறனை 2027ஆம் ஆண்டின் முதல் அல்லது இரண்டாம் காலாண்டிற்குள் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்நிறுவனம் இந்த திட்டத்தின் மூலம் சுமார் 2,000 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவுள்ளது. இதுவரை F77 மற்றும் X47 போன்ற உயர் ரக எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்களை மட்டுமே தயாரித்து வந்த அல்ட்ரா வயலட் நிறுவனம், இப்போது மாஸ் மார்க்கெட் எனப்படும் பொதுமக்களுக்கான வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளது.
தற்போதுள்ள பெங்களூர் ஆலையின் மூலம் ஆண்டுக்கு 50,000 வாகனங்களை மட்டுமே தயாரிக்க முடிவதால், வாடிக்கையாளர்களின் அதீத தேவையை கருத்தில்கொண்டு இந்த புதிய ஓசூர் ஆலை அமைக்கப்படுகிறது. குறிப்பாக, டெஸ்ராசெக்ட் ஸ்கூட்டருக்கு மாதந்தோறும் குறைந்தது 10,000 யூனிட்கள் வரை தேவை இருக்கும் என நிறுவனம் கணிக்கிறது. இதன் மூலம் ஓலா எலக்ட்ரிக் மற்றும் ஏத்தர் எனர்ஜி போன்ற பெரிய நிறுவனங்களுக்கு நேரடி போட்டியாக இந்நிறுவனம் உருவெடுக்கிறது.
உள்நாட்டு சந்தை தேவையைத் தாண்டி, சர்வதேச நாடுகளுக்கும் தனது வாகனங்களை ஏற்றுமதி செய்ய இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆரம்பத்தில் உற்பத்தியில் 15% ஏற்றுமதிக்கு ஒதுக்கப்படும் என்றும், வரும் ஆண்டுகளில் அது 25% ஆக அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகள் ,லத்தீன் அமெரிக்கா மற்றும் வட அமெரிக்கா ஆகிய சந்தைகளை இலக்காக கொண்டுள்ளது.
பெங்களூரில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்திற்கு மிக அருகில் ஓசூர் இருப்பதும், ஆட்டோமொபைல் துறைக்கு தேவையான உதிரிபாகங்கள் எளிதில் கிடைக்கக்கூடிய விநியோக சங்கிலி வசதிகள் இருப்பதுமே ஓசூரை தேர்வு செய்ய காரணம் என தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications


