இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் வேகமாக வளர்ச்சி அடைந்து வந்த EDTECH துறையில் முன்னணி நிறுவனமாக இருந்து Unacademy புதிய முதலீடுகளைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டு உள்ள காரணத்தால் செலவுகளைக் குறைக்க வேண்டும் என்பதற்காகச் சுமார் 1000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்துள்ளது.
இதன் மூலம் இத்துறையில் இருக்கும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மத்தியில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஆனால் இதே துறையில் இருக்கும் பைஜூஸ் வேகமாக வளர்ந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.
Unacademy நிறுவனம்
இந்திய EDTECH ஸ்டார்ட்அப் துறையில் பைஜூஸ் நிறுவனத்திற்குப் போட்டியாக Unacademy போன்ற சில நிறுவனங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தற்போது புதிய முதலீட்டைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 1000 நிரந்தர மற்றும் ஒப்பந்த கல்வியாளர்களைக் கடந்த சில வாரத்தில் பணிநீக்கம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.
1000 ஊழியர்கள் பணிநீக்கம்
ஜப்பான் சாப்ட்பேங்க் முதலீட்டில் இயக்கி வரும் Unacademy நிறுவனம் கடந்த வாரமே 600 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் பணிநீக்கத்தில் இந்நிறுவனத்தின் பணியாற்றி வந்த கல்வியாளர்கள் அதாவது ஆசிரியர்கள் மற்றும் பல விற்பனை பிரிவு அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
பேடிஎம் ஐபிஓ தோல்விக்குப் பின்பு அனைத்து முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்களும் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டு வருகிறது. ஒருபக்கம் பங்குச்சந்தையில் ஐபிஓ வெளியிட்ட நிறுவனங்கள் நினைத்த அளவிற்கு லாபம் பெறாத காரணத்தால் சரிவைச் சந்தித்து வருகிறது. மறுபுறம் போதுமான முதலீடுகள் இல்லாமல் முன்னணி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பாதித்து வருகிறது.
3.4 பில்லியன் டாலர் மதிப்பீடு
2015ல் துவங்கிய Unacademy நிறுவனம் மிகவும் குறைந்த காலகட்டத்திலேயே வேகமாக வளர்ச்சி அடைந்து குறிப்பிடத்தக்க அளவிலான சந்தை வர்த்தகத்தைக் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் ஆகஸ்ட் 2021ல் சிங்கப்பூர் அரசு முதலீட்டு நிறுவனமான Temasek தலைமையிலான முதலீட்டுச் சுற்றில் 440 மில்லியன் டாலர் முதலீட்டை திரட்டி சுமார் 3.4 பில்லியன் டாலர் மதிப்பீட்டைப் பெற்றது.
பணிநீக்கம்
இந்நிலையில் Unacademy நிறுவனம் தனது செலவுகளைக் குறைக்கும் விதமாக அனைத்து பிராந்திய வர்த்தகத்தில் அதிகளவிலான கட்டுப்பாடுகளை விதித்துப் பணிநீக்கத்தை அறிவித்துள்ளது. இது இந்நிறுவன ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 மாத வேலைநீக்க ஊதியம்
தற்போது பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ள 1000 ஊழியர்களில் 300 ஆசிரியர்கள் ஒப்பந்த முறையில் பணியாற்றியவர்களும் அடக்கம். மீதமுள்ள 700 பேர் சேல்ஸ், வர்த்தகம் மற்றும் இதர பிரிவுகளைச் சார்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 2 மாத severance pay, அதாவது வேலைநீக்க ஊதியம் அளிக்கப்பட்டு உள்ளது.