இந்திய வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் மட்டும் கேட்க ஆளில்லாமல் அதாவது இன்சூரன்ஸ் திட்டம் முதிர்வு அடைந்தும் பணத்தைப் பெறாமல் இருப்பது முதல் பல வகையில் கேட்க ஆளில்லாமல் சுமார் 49,000 கோடி ரூபாய் இருப்பதாக நாடாளுமன்றத்தில் மாநில நிதித் துறை அமைச்சர் பகவத் கார்டு தெரிவித்துள்ளார். இது டிசம்பர் 31, 2020 வரையிலான காலம் வரை திரட்டப்பட்ட தரவுகள்.
49,000 கோடி ரூபாய்
மாநில நிதித் துறை அமைச்சர் பகவத் கார்டு நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வங்கிகளில் டெப்பாசிட் திட்டம் முதிர்வு அடைந்து வித்டிரா செய்யாமல் சுமார் 24,356 கோடி ரூபாய் உள்ளது. இதேபோல் IRDAI அமைப்பின் தரவுகள் படி தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் கிளைம் செய்யப்படாமல் இருக்கும் இன்சூரன்ஸ் தொகையின் அளவு 24,586 கோடி ரூபாய்.
பணத்தை அரசு என்ன செய்யும்?
இந்தப் பணத்தை வைத்து அரசு என்ன செய்யும்..? பல நூறு கோடி ரூபாய் ஒவ்வொரு வருடமும் இத்தகையப் பிரிவில் வந்து சேரும் காரணத்தால் இதை முறையாகப் பயன்படுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி ஒரு திட்டத்தைத் தீட்டியது, இத்திட்டத்தின் பெயர் DEAF 2014.
வங்கி டெப்பாசிட் பணம்
ரிசர்வ் வங்கியின் Depositor Education and Awareness Fund (DEAF) Scheme, 2014 திட்டத்தின் படி மக்களால் கோரப்படாத பணத்தை வங்கிகள் DEAF திட்டத்திற்கு மாற்றப்படும். இந்தப் பணத்தை வைப்பு நிதியாளர்களின் நலன்களுக்காகப் பயன்படுத்தப்படும்.
இன்சூரன்ஸ் தொகை
இதேபோன்று இன்சூரன்ஸ் திட்டத்தில் 10 வருடங்களுக்கு அதிகமாகக் கோரப்படாமல் இருக்கும் பணத்தை Senior Citizens'' Welfare Fund (SCWF) என்னும் கணக்கிற்கு மாற்றப்பட்ட மூத்த குடிமக்களுக்கான நலன்களுக்குப் பயன்படுத்தப்படும்.
கூடுதல் முயற்சி
இதேவேளையில் வங்கி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களை ரிசர்வ் வங்கியும், மத்திய நிதியமைச்சகமும் கோரப்படாமல் இருக்கும் பணத்தின் உரிமையாளர்களைக் கண்டுப்பிடிக்க கூடுதல் முயற்சிகளை எடுக்க வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் இப்பிரிவில் வரும் பணத்தின் அளவு ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.