கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் நடுத்தர மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதுவும் குறிப்பாக, தங்களின் வேலை வாய்ப்பு தொடர்பாக அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
ஆம், இன்று பார்த்துக் கொண்டிருக்கும் வேலை, நாளை இருக்குமா? பார்க்கும் வேலைக்கு முழு சம்பளம் வருமா? என பயத்திலேயே பல குடும்பங்கள் இன்னும் உறைந்து கிடக்கின்றன. இந்த நேரத்திலும், சத்தம் இல்லாமல் நிறைய லே ஆஃப் பணிகள் வேறு தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
உபர், ஓலா, ஸ்விக்கி, வீ வொர்க், லிவ் ஸ்பேஸ் போன ஸ்டார்ட் அப் கம்பெனிகளைத் தாண்டி, இப்போது லே ஆஃப் பூதம், ரேமண்ட் போன்ற பழைய பாரம்பரிய கம்பெனிகளிலும் தலை எடுக்கத் தொடங்கி இருக்கிறது. இப்படி தங்கள் ஊழியர்களை லே ஆஃப் செய்யும் கபெனிகளின் பட்டியல் மிக நீளமாக போகிறது. இப்படி ஆயிரக் கணக்கான ஊழியர்கள், தங்கள் வேலையை இழந்து கொண்டிருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஏற்கனவே இந்தியாவில் சுமாராக 4-ல் ஒருவருக்கு வேலை இல்லை என்கிறது ஒரு சில தரவுகள்.
ஆங்கிலத்தில் Unemployment rate என்பார்களே, அது, இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இந்த Unemployment rate, கடந்த 30 நாட்களில், ஒட்டு மொத்த இந்தியாவில் 24.5 %-மாக இருக்கிறது என கணக்கு சொல்கிறது CMIE என்கிற் நிறுவனம்.
கிராம புறங்களில் Unemployment rate 23.7 %-மாக இருக்கிறது. அதாவது இந்திய கிராம புறங்களில் 100 பேர் வேலை பார்க்கத் தயாராக இருக்கிறார்கள் என்றால், அதில் 23.7 பேருக்கு வேலை இல்லை என்கிறது CMIE.
இந்திய நகர் புறங்களில் Unemployment rate 26.3%-மாகவும் இருக்கிறது. இந்திய நகர் புறங்களில் 100 பேர் வேலை பார்க்கத் தயாராக இருக்கிறார் என்றால் அதில் 26.3 பேருக்கு வேலை இல்லை என்கிறது CMIE.
ஆக, இந்தியாவின் கிராம புறத்தை விட, நகர் புறத்தில் தான் வேலை இல்லா திண்டாட்டம் அதிகமாக இருக்கிறது, என்பதை இந்த Unemployment rate தரவுகள் நமக்குத் தெளிவாகச் சொல்கின்றன. இதில் லே ஆஃப் பணிகள் வேறு தொடர்வதால் மேலும் இந்திய நகர் புறங்களில், Unemployment rate அதிகரிக்கலாம்.
இன்னும் இந்த கொரோனா வைரஸ், நமக்கு என்ன கொடுமைகளை எல்லாம் செய்ய காத்திருக்கிறதோ தெரியவில்லை. யார் யாருக்கு ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. என்று ஒழியும் இந்த கொரோனா..?