இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த வேலையில் லாக்டவுன் மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மூலம் நாடு முழுவதும் வர்த்தகம் பாதித்துப் பல கோடி பேர் தங்களது வேலைவாய்ப்பை இழந்து தவித்தனர்.
தற்போது கொரோனா தொற்று குறைந்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறைந்து வரும் காரணத்தால் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் கடந்த ஒரு மாதமாக உருவாகி வருகிறது, குறிப்பாக வகைப்படுத்தாத துறையில் வேலைவாய்ப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
வேலைவாய்ப்பின்மை அளவீடு
இதன் வாயிலாக இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை அளவீடு மே மாதத்தில் இருந்த 11.9 சதவீதத்தில் இருந்து 9.19 சதவீதமாகக் குறைந்துள்ளது. நாட்டின் வர்த்தகச் சந்தை வளர்ச்சி தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் இருந்தால் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் 6-7 சதவீதம் வரையில் சரிய அதிகளவிலான வாய்ப்பு உள்ளது.
கொரோனாவுக்கு முன்
இந்தியாவில் வேலைவாய்ப்புகள் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும், இன்னமும் கொரோனாவுக்கு முந்தைய கால அளவீட்டை அடையவில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது. கொரோனா தொற்றுக்கு முந்தைய நிலையை அடையக் குறைந்தது இந்தியாவிற்கு ஒரு வருடமாவது தேவைப்படும்.
நகரப்புற வேலைவாய்ப்பின்மை
இதேபோல் ஜூன் மாதத்தில் நகரப்புற வேலைவாய்ப்பின்மை அளவீடுகள் 14.73 சதவீதத்தில் இருந்து 10.07 சதவீதமாகக் குறைந்துள்ளது. இதேபோல் ஊரக மற்றும் கிராமப்புற பகுதிகளில் வேலைவாய்ப்பின்மை அளவீடு 10.63 சதவீதத்தில் இருந்து 8.75 சதவீதமாகக் குறைந்துள்ளது.
ஏப்ரல் 2020 அளவீடு
இந்த வேலைவாய்ப்பின்மை அளவீடு ஏப்ரல் 2020ல் 23.52 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. கொரோனா முதல் அலையில் நாடு முழுவதும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது மூலம் மக்கள் அதிகளவிலானோர் வேலைவாய்ப்பை இழந்தனர். தற்போது 9.17 சதவீதமாகக் குறைந்துள்ளது.