இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் லாக்டவுன் மற்றும் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வர்த்தகத்தை இழந்த பல நிறுவனங்கள் மூடிய காரணத்தால் பல கோடி பேர் நாடு முழுவதும் வேலையை இழந்து வருகின்றனர்.
இதனால் நாட்டில் வேலைவாய்ப்பின்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, மார்ச் மாதம் 6.50 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம் ஏப்ரல் மாத முடிவில் நாட்டின் 7.97 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் தற்போது மே மாதம் 16ஆம் தேதி முடிந்த வாரத்தில் மட்டும் வேலைவாய்ப்பின்மை 14.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஒரு வருடத்தில் அதிகமாக அளவீடாகப் பார்க்கப்படுகிறது என CMIE அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேபோல் மே 19ஆம் தேதி வரையிலான கடந்த 30 நாட்களில் நாட்டின் வேலைவாய்ப்பின்மை விகிதம் 9.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது நகர்ப்புறத்தில் 11.8 சதவீதமாக உயர்ந்து வருகிறது, கிராமப்புறத்தில் 8.8 சதவீதமாக உள்ளது.
கொரோனா தட்டுப்பாடுகள் நாளுக்கு நாள் நகரங்களில் அதிகரித்து வரும் காரணத்தால் மே 1ஆம் தேதி 9.60 சதவீதமாக இருந்து நகரத்து வேலைவாய்ப்பின்மை விகிதம், மே 19ஆம் தேதி 11.77 சதவீதமாக உயர்ந்துள்ளது.
முதல் கொரோனா அலை முடிவதற்குள் 2வது கொரொனா தொற்று அலை வந்துள்ள காரணத்தால் பெரிய அளவிலான பாதிப்புகள் வர்த்தகச் சந்தையிலும், வேலைவாய்ப்பு சந்தையிலும் உருவாகியுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் 2வது அலையின் காரணமாகக் கடந்த 6 மாதம் உருவான வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவை முழுமையாக இழந்துள்ளோம்.