938ல் இந்தியாவில் தஞ்சமடைந்த 2 டென்மார்க் இன்ஜினியர்கள் உருவாக்கிய நிறுவனம் தான் எல் அண்ட் டி எனப்படும் லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவனம். இந்தியாவில் பல முக்கியக் கட்டுமான திட்டங்களை வெற்றிகரமாக முடித்துச் சுமார் 80 வருடங்களாக இந்தியாவில் வர்த்தகம் செய்து வருகிறது.
இந்த மாபெரும் நிறுவனத்தைக் கைப்பற்ற முயற்சி செய்தார் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் அப்போதையத் தலைவர் திருபாய் அம்பானி. டிசம்பர் 28ஆம் தேதி திருபாய் அம்பானியின் பிறந்த நாள்.
எல் அண்ட் டி போன்ற மிகப்பெரிய நிறுவனத்தைக் கைப்பற்றும் வாய்ப்பை எப்படித் திருபாய் அம்பானி இழந்தார்..
மனு சபாரியா வருகை
1987ல் துபாய் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வர்த்தகம் செய்யும் மனு சபாரியா இந்தியாவில் ஷா வாலேஸ், டன்லப், ஹிந்துஸ்தான் டோர் ஆலிவர் எனப் பல நிறுவனங்களில் முதலீடு செய்துவிட்டு ப்ளூ சிப் பங்கு நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனத்தின் 1 சதவீத பங்குகளைக் கைப்பற்றினார். இவரது முதலீடும், வருகையும் பல நிர்வாகத் தலைவருக்குப் பிடிக்காமல் போனது. இதற்கு முக்கியக் காரணம் மனு சபாரியாவின் அதிரடியான மேலாண்மை மற்றும் நிர்வாக முடிவுகளும் தான்.
திருபாய் அம்பானி
இதனால் எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவரான என்.எம்.தேசாய் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரான திருபாய் அம்பானியிடம், எல் அண்ட் டி நிறுவனத்தில் முதலீடு செய்ய வரவேற்றார். உடனடியாகத் திருபாய் அம்பானி ரீடைல் சந்தையில் இருந்து எல் அண்ட் டி நிறுவனத்தின் 12.4 சதவீத சந்தையைக் கைப்பற்றினார்.
அதிகப் பங்குகளைக் கைப்பற்றல்
காங்கிரஸ் ஆட்சியின் இருந்த காரணத்தால் திருபாய் அம்பானிக்கு அதிகளவிலான உதவிகள் கிடைத்தது. இதன் வாயிலாக 1987 முதல் 1989க்குள் மொத்தம் 18.5 சதவீத பங்குகளை ரீடைல் சந்தையில் இருந்து கைப்பற்றினார் திருபாய் அம்பானி. இவை அனைத்தும் செபி அமைப்பின் கட்டுப்பாடுகள் விதிக்காத போது நடந்தது குறிப்பிடத்தக்கது.
அம்பானி குடும்பம்
18.5 சதவீத பங்குகளை வைத்திருந்த காரணத்தால் திருபாய் அம்பானி எல் அண்ட் டி நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் தனக்கான இடத்தைக் கேட்டார், உடனடியாக நிர்வாகமும் திருபாய் அம்பானி, முகேஷ் அம்பானி, அனில் அம்பானி ஆகியோருக்கு இடம் அளித்தார் அப்போதைய எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவரான என்.எம்.தேசாய்.
எம்.என் தேசாய் நீக்கம்
திருபாய் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனங்களுக்குச் சதகமாகச் செயல்பட்ட காரணத்தால் எம்.என் தேசாய் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். அம்பானி வருகை மூலம் எல் அண்ட் டி நிர்வாகம் மனு சபாரியாவின் கட்டுப்பாடுகளில் இருந்து தப்பித்தது. இதனால் நிர்வாகமும், தலைவர் பதவியும் அம்பானி கையில் வந்தது.
திருபாய் அம்பானி அதிகாரம்
எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவராகத் திருபாய் அம்பானி நியமிக்கப்பட்ட பின், விநியோகஸ்தர் கடனான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்குச் சுமார் 570 கோடி ரூபாய் தொகையைக் கொடுக்க எல் அண்ட் டி நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இதேபோல் எல் அண்ட் டி நிர்வாகத்தை ரீடைல் சந்தையில் இருக்கும் சுமார் 76 கோடி ரூபாய் மதிப்புடைய ரிலையன்ஸ் பங்குகளை வாங்க உத்தரவிட்டார்.
இவ்விரு அறிவிப்புகளும் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு ஏற்றார் போல் அம்பானிகளின் ஆதிக்கம் எல் அண்ட் டி நிறுவனத்தின் சீக்கிரமாகவே ஆட்டம் கண்டது.
ஆட்சி மாற்றம்
1989ல் விபி.சிங்-யிடம் காங்கிரஸ் தோல்வி அடைந்த பின்பு அம்பானிகளின் ஆதிக்கம் குறைந்தது. விபி சிங் எந்தொரு பெரு நிறுவனங்களுக்கும், தலைவர்களும் நண்பராக இல்லாமல் இருந்தது அம்பானிக்கு பெரும் பின்னடைவாக இருந்தது.
எல்ஐசி தலையீடு
விபி.சிங் அரசு ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே எல்ஐசி நிறுவனத்தை எல் அண்ட் டி நிறுவனத்தில் அதிகளவிலான பங்குகளைக் கைப்பற்ற உத்தரவிட்டது. இதனால் எல் அண்ட் டி நிர்வாகத்தில் இருந்தும் தலைவர் பதவியில் இருந்து திருபாய் அம்பானி பதவி விலக வேண்டியது கட்டாயம் ஆனது. இதைத் தொடர்ந்து எல் அண்ட் டி நிறுவனத்திற்கு எஸ்பிஐ வங்கியின் தலைவரான டிஎன் கோஷ் புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.
வர்த்தகப் போராட்டம்
இதே காலகட்டத்தில் தான் திருபாய் அம்பானி பாம்பே டையிங் நிறுவனத்தில் ஆதிக்கம் செலுத்த நுசில் வாடியா உடன் போராடி வந்தார். மறுமுனையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் முறைகேடுகள் அனைத்தும் அருண் ஷவ்ரி வெளியிட்டு வந்தார்.
டிஎன் கோஷ் திடீர் முடிவு
இதைத் தொடர்ந்து எல் அண்ட் டி நிறுவனத்தின் புதிய தலைவரான கோஷ் ரிலையன்ஸ்-க்கு அறிவிக்கப்பட்ட கடன் நிறுத்தப்பட்டது மட்டும் அல்லாமல் எல் அண்ட் டி கையில் இருக்கும் ரிலையன்ஸ் பங்குகளை ரீடைல் சந்தையில் விற்பனை செய்யத் துவங்கினார். முகேஷ் அம்பானியும், அனில் அம்பானியும் எல் அண்டி டி நிர்வாகத்தில் இருந்த போதும் அதைத் தடுக்க முடியவில்லை.
மீண்டும் ஆட்சி மாற்றம்
ஆனால் 1990லேயே விபி சிங் ஆட்சி கவிழ்ந்து, 1990ல் சந்திரசேகர் பிரதமர் ஆனார். சந்திரசேகர் ஆட்சி அம்பானி சாதகமாக அமைந்தாலும், 1991ல் மீண்டும் பொதுத் தேர்தல் நடந்து மீண்டும் பி.வி. நரசிம்ம ராவ் தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தது. மீண்டும் எல் அண்ட் டி நிர்வாகத்தின் தலைவராக அம்பானி நியமிக்கப்பட அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்ட நிலையில் போதுமான உதவிகள் அரசு தரப்பில் இருந்கு கிடைக்காத காரணத்தால் முயற்சிகளைக் கைவிட்டார் அம்பானி.
அதிகாரமற்ற முதலீட்டாளர்
இதனால் அடுத்த 10 வருடம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அம்பானி குடும்பம் எல் அண்ட் டி குழுமத்தின் அதிகாரமற்ற முதலீட்டாளராகவே இருந்தது. இதனால் எல் அண்ட் டி நிர்வாகத்தில் பெரிய அளவிலான அதிரடிகள் எதுவும் இல்லை.
ஆதித்யா பிர்லா கிராசிம்
இந்த நிலையில் நவம்பர் 2001ல் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது கையில் வைத்திருந்த 10.05 சதவீத எல் அண்ட் டி பங்குகளை, இந்நிறுவனத்தின் சிமெண்ட் வர்த்தகத்தின் சக போட்டி நிறுவனமான பிர்லா குழுமத்தின் கிராசிம் நிறுவனத்திற்கு விற்பனை செய்து மொத்தமாக வெளியேறினார் திருபாய் அம்பானி.
எம்என் நாயக்
ரிலையன்ஸ் பிர்லா குழுமத்திற்கு மத்தியில் பங்கு விற்பனை செய்யப்பட்ட போது எல் அண்ட் டி நிறுவனத்தின் தலைவராக இருந்தவர் தான் ஏஎம் நாயக். இந்நிறுவனத்தின் நிர்வாகத்தில் நீண்ட காலமாக நடக்கும் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க இந்நிறுவனத்தின் ஊழியர்களிடம் சென்று நாமே பங்குகளைக் கைப்பற்றி நிர்வாகத்தைக் கையில் எடுப்போம் எனத் திட்டத்தைக் கூறினார்.
இதனால் ஊழியர்கள் அனைவரும் முதலாளிகள் ஆனார்கள்.
முக்கியமான பேச்சுவார்த்தை
இதன் பின் எம்என் நாயக் பிரதமர் முதல் எல்ஐடி வரையில் அனைத்துத் தரப்புகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி 2003ல் பிர்லா குழுமத்திடம் இருந்த 10.05 சதவீத பங்குகளை எல் அண்ட் டி ஊழியர்கள் அமைப்பு கைப்பற்றியது. இதற்குப் பதிலாக எல் அண்ட் டி குழுமத்தின் சிமெண்ட் பிரிவை முழுமையாகப் பிர்லா குழுமம் பெற்றது.
இந்தப் பிரிவு தான் தற்போது பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக்.