டெல்லி: நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்த நிலை, உற்பத்தி வீழ்ச்சி, பணி நீக்கம், வேலையில்லா திண்டாட்டம், தேவை குறைவு, பணவீக்கம் என மக்களை பாடாய் படுத்தி வரும் நிகழ்வுகள் ஒரு புறம்.
இதெற்கெல்லாம் ஏதேனும் விடிவுகாலம் வந்துவிடாதா என்ற எதிர்பார்ப்பில் மக்கள் மறுபுறம்.
குறைந்தபட்சம் வரவிருக்கும் பட்ஜெட்டிலாவது ஏதேனும் தங்களது துறைக்கு சாதமாக இருந்து விடாதா என்ற எதிர்பாப்பில், பல்வேறு தொழில் துறையினர். இப்படி ஒவ்வொருவரின் கேள்விக்கும் பட்ஜெட்டில் ஏதேனும் துரித நடவடிக்கைகள் இருந்திடாதா என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆரம்பித்துள்ளது பட்ஜெட் அறிக்கை அச்சிடுதல் பணி இன்று ஆரம்பமாக உள்ளது. .
பட்ஜெட் அறிக்கை
இந்த நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தனது இரண்டாவது பட்ஜெட்டுக்கு தீவிரமாக தயாராகி வருகிறார். சொல்லப்போனால் பிரதமர் மோடி முதல் கொண்டு, இந்த பட்ஜெட் சம்பந்தமாக முக்கிய தொழில் துறையினர், பல பொருளாதார நிபுணர்கள் என பலரிடம் ஆலோசனை நடத்தினார். அப்படி ஆலோசனை நடத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட பட்ஜெட் குறித்தான அறிக்கை தற்போது அச்சிட தயாராகி உள்ளது.
இனிப்புடன் ஆரம்பிக்கும் பட்ஜெட் திருவிழா
வரவிருக்கும் பிப்ரவரி 1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படவிருக்கும் நிலையில், தற்போது பரப்பரப்பாக அந்த வேலையில் இறங்கியுள்ளார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அதன் முதல் அறிகுறியாக இன்று அல்வா கிண்டும் நிகழ்வு நடைபெற உள்ளது.
இது சம்பிரதாயம் தான்
பல்வேறு தரப்பினருடனும் ஆலோசனை நடத்தப்பட்டு தயாரிக்கப்பட்ட இந்த பட்ஜெட் அறிக்கையை நாங்கள் தயார் செய்து விட்டோம் என்று மக்களுக்கு அறிவிக்கும் ஒரு பாரம்பரிய நிகழ்வாகத் தான் இந்த அல்வா கிண்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்வு ஆனது நிதியமைச்சகம் அமைந்துள்ள வடக்கு பகுதியில் நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பட்ஜெட் அறிக்கை அச்சிடும் பணி
இங்கு தான் பட்ஜெட் அறிக்கை அச்சிடும் பணி நடைபெறும். இந்த 10 நாட்களுக்கு அவர்கள் அங்கேயே தான் தங்கி இருப்பார்கள் என்றும், பட்ஜெட் சம்பந்தமான எந்தவொரு விஷயமும் வெளியில் கசிந்துவிடக் கூடாது என்பதற்காக இப்படி ஒரு முறை நடைமுறையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஜிடிபி படு வீழ்ச்சி
கடந்த செப்டம்பர் மாத காலாண்டில் ஜிடிபி விகிதமானது ஆறரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சி கண்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படவிருக்கும் பட்ஜெட் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஏனெனில் பொருளாதாரத்தினை விரைவில் மேம்படுத்த தேவையான திட்டங்கள் இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பரில் எப்படி?
இப்படி ஒரு நிலையில் கடந்த டிசம்பர் மாத காலாண்டிலும் ஜிடிபி வீழ்ச்சி காணலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதிலும் நடப்பு நிதியாண்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி 5%மாகத்தான் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படும் நிலையில், வீழ்ச்சி காண்பது உறுதி என்பது தெளிவாக தெரிகிறது.
அரசு நடவடிக்கை
பொருளாதாரத்தினை மேம்படுத்தவும், உற்பத்தி வளர்ச்சியினை மேம்படுத்தவும் மத்திய அரசு, கார்பரேட் வரி குறைப்பு, பொதுத்துறை வங்கிகளின் மாபெரும் இணைப்பு என பலவேறு நடவடிக்கை எடுத்தது. ஆனால் அதன் எதிரொலியானது இன்று வரை பெரிதும் காணப்படவில்லை.
வருவாய் குறையும்
இதற்கிடையில் அரசுக்கு வருவாயாக இருக்கும் அதன் நேரடி மற்றும் மறைமுக வரி வசூல் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதெல்லாவற்றையும் கருத்தில் கொண்டு தான் மத்திய பட்ஜெட் முன்வைக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மீள்ச்சி நடவடிக்கை
ஆக இதெல்லாம் கருத்தில் கொண்டும் இந்த பட்ஜெட் இருக்கலாம், மேலும் சில பொருளாதார நிபுணர்கள் வருமான வரியில் மாற்றம் செய்யலாம் என்றும், இதனால் மக்கள் கையில் பணம் புழக்கம் அதிகரிக்கலாம் என்றும் கூறியுள்ளனர். மேலும் இதனால் நுகர்வு அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆக என்னதான் நடக்க போகிறது, இன்னும் 10 நாட்கள் பொறுத்திருந்து தான் பார்ப்போமே.