டெல்லி: ஏர் இந்தியாவில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் முதலீடு செய்வதற்கான உச்சவரம்பு 100%-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியான அறிவிப்பில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் இன்று சிவில் விமானப் போக்குவரத்துத் துறையில் முழு அந்நிய நேரடி முதலீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதற்கு முன்னதாக குடியுரிமை பெறாத இந்தியர்களுக்கான முதலீடு வரம்பு 49%-ஆக இருந்த நிலையில், தற்போது ஏர் இந்தியா விற்பனையில் இது 100% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரசு முடிவு
இது தொடர்பான முடிவுகள் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பத்திரிகையாளர் சந்திப்பில் கூறுகையில், ஏர் இந்தியாவின் 100% பங்குகளை விற்பனை செய்ய அரசாங்கம் முடிவெடுத்திருக்கும் நேரத்தில் இந்த முடிவு வந்துள்ளது.
அமைச்சரவை ஒப்புதல்
தற்போது ஏர் இந்தியாவில் 100% பங்குகளை வைத்திருக்க குடியுரிமை பெறாத இந்தியர்களை அனுமதிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும் ஜவடேகர் தெரிவித்துள்ளார். மேலும் இதுவரை நேரடி அன்னிய முதலீட்டுக் கொள்கையில் வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்திய பங்குகளை 49% என்ற அளவிற்கு வாங்க மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். ஆனால் இது தற்போது உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விதிகள் மாறாது
எனினும் தற்போது ஏர் இந்தியாவைப் பொறுத்த வரையில் இந்த கொள்கையானது 100% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதே சமயம் வெளிநாடு வாழ் இந்தியர்கள் செய்யும் முதலீடு, உள்நாட்டு முதலீடாகவே கருதப்படுவதால், ஏர் இந்தியா விற்பனையில் விமான நிறுவனங்களுக்கான சர்வதேச விதிகள் மாற்றப்படாது என்றும் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
விண்ணபிக்க இது தான் கடைசி தேதி
பல ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கும் ஏர் இந்தியாவின் 100% பங்குகளையும் தனியாருக்கு விற்க முடிவெடுத்துள்ள மத்திய அரசு, அதற்கான விண்ணப்பங்களை மார்ச் 17 ஆம் தேதி வரை வரவேற்றுள்ளது. மேலும் சமீபத்திய முதலீட்டு திட்டத்தின் கீழ் வெற்றிகரமான ஏலதாரர் 23,286.5 கோடி ரூபாய் மதிப்புள்ள கடனை மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். அதே நேரம் இப்பரிவர்த்தனை முடிவடையும் நேரத்தில் தற்போதைய சொத்துக்களை பொறுத்து கடன்கள் தீர்மானிக்கப்படும்.
மிக நீண்ட காலமாக கடன் பிரச்சனையில் தத்தளித்து வரும் ஏர் இந்தியா பங்குகளை விற்க அரசு எடுக்கும் இரண்டாவது முயற்சியாகும்.