பிப்ரவரி 1ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் அறிக்கையில், மத்திய அரச கையிருப்பில் இருக்கும் அரசு பங்குகளை விற்பனை செய்வதன் மூலம் 1.75 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதியைத் திரட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த இலக்கை அடைய 2 பொதுத்துறை வங்கிகளையும், ஒரு இன்சூரன்ஸ் நிறுவனத்தையும் தனியார்மயமாக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது மத்திய அரசு சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப் ஆகிய இரு இன்சூரன்ஸ் நிறுவனங்களில் எந்த நிறுவனப் பங்குகளை விற்பனை செய்யலாம் எனத் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறது.
1.75 லட்சம் கோடி ரூபாய்
2021ஆம் நிதியாண்டில் அரசு கையிருப்பில் இருக்கும் பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டும் திட்டத்தின் கீழ் மத்திய அரசு நிர்ணயம் செய்த 2.1 லட்சம் கோடி ரூபாய் அளவிலான நிதி திரட்டும் இலக்கில் மிகப்பெரிய தோல்வியை அடைந்த நிலையில் நடப்பு நிதியாண்டில் இதன் அளவீட்டைக் குறைத்து 1.75 லட்சம் கோடி ரூபாயாக அறிவித்துள்ளது.
முக்கியமான பட்ஜெட் அறிவிப்பு
இந்த இலக்கை அடைய வேண்டும் என்பதற்காக மத்திய அரசு எந்தெந்த துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து தனியார்மயமாக்க வேண்டும் என்று முன்கூட்டியே திட்டமிட்டு உள்ளது. இதன் படி இரண்டு பொதுத்துறை வங்கிகள், ஒரு இன்சூரன்ஸ் நிறுவனம், 7 துறைமுகங்கள், எல்ஐசி-யின் ஐபிஓ ஆகியவற்றின் இலக்கில் பெரும் பகுதியை அடைய வேண்டும் என நிர்ணயம் செய்துள்ளது.
ஆலோசனைக் கூட்டம்
இதன் படி தற்போது மத்திய நிதியமைச்சகமும், அரசின் நிதி அயோக் அமைப்பும் முதற்கட்டமாகத் தனியார்மயமாக்கப்படும் இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தேர்வு செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதன்படி யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ், ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப் ஆகிய இரு நிறுவனங்களில் ஒரு நிறுவனத்தைத் தேர்வு செய்துள்ளது.
ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம்
ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப் நிறுவனத்தில் மத்திய அரசு சுமார் 85.78 சதவீத பங்குகளை வைத்துள்ளது. மத்திய அரசு ரீஇன்சூரன்ஸ் வர்த்தகத்தில் இருந்து விலக வேண்டும் எனத் திட்டமிட்டால் மட்டுமே ஜெனரல் இன்சூரன்ஸ் கார்ப் பங்குகளை விற்பனை செய்து இந்நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்து தனியார்மயமாக்கப்படும்.
ரீஇன்சூரன்ஸ் வர்த்தகம்
நிதி திரட்டும் திட்டத்திற்காக மத்திய அரசு மொத்த வர்த்தகத் துறையில் இருந்து வெளிவராது என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தைத் தான் தனியார்மயமாக்கத் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிற இன்சூரன்ஸ் நிறுவனங்கள்
இதேவேளையில் மத்திய அரசிடம் இவ்விரு நிறுவனங்களைத் தாண்டி நேஷனல் இன்சூரனஸ், நியூ இந்தியா அஸ்சூரன்ஸ், ஓரியண்டல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனத்திலும் பங்குகளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2022 நிதியாண்டில் விற்பனை
இந்நிலையில் தனியார்மயமாக்க எந்த நிறுவனத்தைத் தேர்வு செய்வது என்பதை மத்திய நிதியமைச்சகமும், அரசின் நிதி அயோக் அமைப்பும் செய்யும் ஆலோசனையில் தான் இறுதி முடிவு எடுக்கப்படும். இந்த முடிவின் படி 2022ஆம் நிதியாண்டில் தேர்வு செய்யப்பட்ட நிறுவனத்தின் பங்குகளை விற்பனை செய்யப்படும்.