டெல்லி: இந்தியா ஒரு விசித்திரமான தேசம். இந்த நாட்டில் தான் அரசு மருத்துவமனைகளை விட, தனியார் மருத்துவமனைகளால் சிறந்த மருத்துவ வசதிகளைச் செய்து கொடுக்க முடியும்.
அரசு நிறுவனத்தை விட, தனியார் நிறுவனத்தால் அதிக லாபம் ஈட்ட முடியும். அவ்வளவு ஏன் அரசு முடிவுகள் மற்றும் சட்டங்களைக் கூட தனியார் நிறுவனங்களால் மாற்ற முடியும்.
ஆனால் இன்று வரை இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில், தனியார் கைக்கு போகாத வேலைகளில் ஒன்று... இந்த பொது விநியோகம்.
பொது விநியோகம்
இந்தியாவின் கடைக் கோடி ஏழைகள், தினக் கூலிகள், கார்ப்பரேட் கம்பெனிகளில் நாளுக்கு 12 மணி நேரம் போராடும் நடுத்தர ஏழைகள் என பலரும் நம்பி இருக்கும் விஷயம் இந்த பொது விநியோகம். இந்த பொது விநியோகத்தில் கல், மண், புழு, பூச்சிகளுடன் கொடுக்கும் அரிசி, கோதுமையை வைத்து தான் கோடிக் கணக்கான குடும்பங்களின் அடுப்பு எரிந்து கொண்டு இருக்கிறது.
ஊழல்
அப்படிப்பட்ட பொது விநியோகத் துறையில், ஏகப்பட்ட ஊழல் புகார்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கிறதாம். இது குறித்து நுகர்வோர் விவகாரத் துறை இணை அமைச்சர் ராவ் சாஹேப் தன்வே பாடில் பாராளுமன்றத்தில் பேசி இருக்கிறார். கடந்த 31 அக்டோபர் 2019 வரை, இந்தியா முழுக்க, பொது விநியோகம் குறித்து மொத்தம் 807 புகார்கள் பதிவாகி இருக்கிறதாம்.
உத்திரப் பிரதேசம் முதலிடம்
அந்த 807 புகார்களில் 328 புகார்கள் உத்திரப் பிரதேசத்தில் இருந்து மட்டுமே பதிவாகி இருக்கிறதாம். அடுத்த 108 புகார்கள் பதிவாகி பீகார் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்தியாவின் ஒட்டு மொத்த பொது விநியோகம் சார்ந்த புகார்களில் 54 சதவிகித புகார்கள் இந்த இரண்டு மாநிலங்களில் இருந்து மட்டுமே வந்திருக்கிறது.
வரலாறு
கடந்த 2014-ம் ஆண்டு வாக்கில் , அலஹாபாத் உயர் நீதிமன்றமே உணவு தானிய ஊழலில் தலையிட்டு, முன்னாள் மத்திய இணை அமைச்சர் ரகு ராஜ் பிரதாப் சிங்கின் நிலத்தை சோதனை செய்யச் சொன்னது நினைவில் இருக்கலாம். இப்படி அடிக்கடி உத்திரப் பிரதேசத்தில் பொது விநியோகம் சார்ந்த பிரச்னைகள் தலைப்புச் செய்திகளாக வரும் வரலாறு கொண்ட மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆச்சர்யம்
இதில் இன்னொரு ஆச்சர்யமான மற்றும் அவமானகரமான விஷயம் என்ன என்றால்... இந்தியாவின் தலை நகரான டெல்லி, இந்த பட்டியலில், 78 புகார் பதிவுகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. தலைநகரிலேயே நிலைமை இப்படி இருக்கிறது என்றால் வட கிழக்கு போன்ற பின் தங்கிய மாநிலங்களில் நிலைமை இன்னும் எவ்வளவு மோசமாக இருக்கும் எனத் தெரியவில்லை.
பொது விநியோகம் பல கோடி மக்களின் வாழ்வாதாரம். அதில் அரசு கூடுதல் கவனம் செலுத்தி இந்த ஊழல்களை ஒழிக்க வேண்டும். ஒழிக்கும் என நம்புவோம்.