இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பு உலகிலேயே மிக பெரியது. அன்றாடம் கோடிக்கணக்கான மக்கள் யூபிஐ உள்ளிட்டவற்றை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்கிறார்கள். இந்த யூபிஐ முறையில் ஏஐ மூலம் மிகப்பெரிய மாற்றத்தை கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பொதுவாக பாஸ்வேர்டுகள், பின் நம்பர், ஓடிபி மற்றும் கைரேகை போன்றவற்றை அங்கீகாரமாக பயன்படுத்தி தான் நாம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொள்கிறோம். இதன் அடுத்த கட்டமாக யூனிஃபைட் ஏஜென்ட் புரோட்டோகால் (Unified Agent Protocol - UAP) என்ற புதிய கட்டமைப்பை இந்தியா உருவாக்க இருக்கிறது. இதன் மூலம் ஏஐ ஏஜெண்டுகள் நமது பணப்பரிவர்த்தனைகளை செய்து முடிக்கும்.

பயனர்கள் தங்கள் ஏஐ ஏஜெண்டுகளுக்கு சில குறிப்பிட்ட விதிகள் மற்றும் பரிவர்த்தனை வரம்புகளை நிர்ணயம் செய்யலாம். அதாவது, எங்கு, எப்போது, எவ்வளவு தொகை வரை ஏஐ பணம் செலுத்தலாம் என்ற கட்டுப்பாடுகளை நாம் தீர்மானிக்க முடியும். மளிகை பொருட்கள் வாங்குவது போன்ற சிறிய மற்றும் அடிக்கடி செய்யக்கூடிய பணப்பரிவர்த்தனைகளுக்கு இந்த ஏஐ முறை பயன்படுத்தி சோதிக்கப்பட உள்ளது.
மேலும் நமது விருப்பத்திற்கு ஏற்ப, ஈ-காமர்ஸ் தளங்களில் கிடைக்கும் தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை கண்டறிந்து ஏஐ ஏஜெண்டுகளே ஆர்டர்களை செய்யும் வசதியும் வர உள்ளது. அதாவது நாம் கட்டளையிட்டால் போது ஏஐ நமக்கான பொருட்களை ஆர்டர் செய்து நம் கணக்கில் இருந்து பணமும் செலுத்திவிடும்.
உதாரணமாக தினமும் 1 லிட்டர் பால் இன்ஸ்டாமார்ட்டில் ஆர்டர் செய்ய வேண்டும் அதற்கான தொகை இவ்வளவு என நீங்கள் வரம்பினை நிர்ணயம் செய்தால் போதும். தினமும் ஏஐ உங்களுக்கு பால் ஆர்டர் செய்து கொடுக்கும். இந்த புதிய முறைக்குத் தேவையான உள்கட்டமைப்புகளை தேசிய கொடுப்பனவு கழகம் ( NPCI ) உருவாக்கி வருகிறது.
ஏற்கனவே நடைமுறையில் உள்ள UPI Circle மற்றும் Reserve Pay போன்ற யூபிஐ வழிமுறைகள் இதற்கு பயன்படுத்தப்படவுள்ளது. வணிகர்கள் இந்த அமைப்புடன் எளிதாக இணைவதற்கான வசதிகளையும் NPCI ஏற்படுத்தி தரும். இருந்தாலும் பண பரிவர்த்தனையில் ஏஐ-க்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டால் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படலாம் என்பதால், சில கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டுவர இருக்கிறார்கள்.
அதாவது ஏஐ எவ்வளவு செலவு செய்ய வேண்டும் என்பதற்கான உச்சவரம்பை பயனர்கள் நிர்ணயிக்கலாம். மேலும் முறைகேடுகளை தவிர்க்க சில அங்கீகார முறைகள் இருக்கும். ஏஐ மூலமாக பணப்பரிவர்த்தனைகளில் ஏதேனும் தவறுகள் நடந்தால், யார் அதற்கு பொறுப்பு என்பது தொடர்பான வழிகாட்டுதல்களையும் NPCI உருவாக்க திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே மாஸ்டர்கார்டு நிறுவனம் Agent Pay என்ற பாதுகாப்பு உள்கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. விசா நிறுவனமும் இதே போன்ற ஏஐ வர்த்தக முறைகளை உருவாக்கி வருகிறது. இந்தியாவில் மாஸ்டர்கார்டு மற்றும் பைன் லேப்ஸ் போன்ற ஃபின்டெக் நிறுவனங்கள் இது தொடர்பான சோதனைகளை ஏற்கனவே மேற்கொண்டுள்ளன. விரைவில் மும்பையில் நடைபெற உள்ள குளோபல் ஃபின்டெக் விழாவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications

