நம்மில் பெரும்பாலானோர் ஆன்லைன் பேமெண்ட் தளங்களை அதிகம் பயன்படுத்த தொடங்கிவிட்டோம். ஆனால் ஒரு சில நேரங்களில் திடீரென UPI வேலை செய்யாமல் போய்விடும். அதுவும் பெட்ரோல் பங்க் அல்லது சூப்பர் மார்க்கெட்டில் பணம் செலுத்தும்போது "Transaction Failed" என மெசேஜ் வந்தால் ஒருவித பதற்றமும் பயமும் கலந்து சிறிய ஹார்ட் அட்டாக்கே வந்துவிடும். அக்கவுண்டில் பேலன்ஸ் இருந்தும், இன்டர்நெட் வசதி இருந்தும் ஏன் இப்படி நடக்கிறது தெரியுமா?
யுபிஐ மூலம் பணம் செலுத்த முடியாமல் போனால் உடனே உங்கள் அக்கவுண்ட்டை வங்கி பிளாக் செய்துவிட்டது என்று அர்த்தமில்லை. சில நேரங்களில் உங்களுடைய பணத்தை பாதுகாக்கவும் இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படும்.

வங்கி சேவைகள் தற்காலிகமாக தடைபட என்ன காரணம்?:
வாடிக்கையாளர் பணம் செலுத்தும் நடைமுறையில் மாற்றம்: யுபிஐ பயன்படுத்தும் வாடிக்கையாளர் வழக்கமாக சிறு தொகையை மட்டும் ஒன்லைன் தளங்கள் மூலம் அனுப்புபவர் என்றால் எந்த பிரச்சனையும் இருக்காது. பெரும்பாலான நேரங்களில் பணம் அனுப்பிவிடலாம். ஆனால் ஒரு புதிய போனிலிருந்தோ அல்லது வேறு ஊருக்கு சென்றோ பெரும் தொகையை அனுப்பும் போது வங்கியின் பாதுகாப்பு அமைப்பு அந்த குறிப்பிட்ட பரிவர்த்தனையை சந்தேகிக்கும். அதுவும் தற்போதைய சூழலில் மோசடி சம்பவங்கள் அதிகம் நடப்பதால் இது போன்ற பிரச்சனையை தடுப்பதற்காகவே இந்த தற்காலிக தடையை வங்கிகள் செயல்படுத்துகிறது.
தவறான யுபிஐ பின் நம்பர்: ஒரு சிலர் யுபிஐ பின் நம்பரை மறந்து விட்டு மீண்டும் மீண்டும் தவறாக போட்டுக் கொண்டே இருப்பார்கள். நீங்களே பின் நம்பரை மறந்திருந்தாலும் வேறு யாரோ உங்கள் மொபைல் போன் மூலம் பரிவர்த்தனை செய்வதாக தான் வங்கிகள் கருத்தில் கொள்ளும். அப்போது தற்காலிகமாக யுபிஐ சேவை நிறுத்தப்படும்.
லிமிட்டை தாண்டிய பரிவர்த்தனை: ஒரு நாளில் எவ்வளவு தொகையை அனுப்ப வேண்டும், எத்தனை முறை அனுப்ப வேண்டும்? என்பதற்கெல்லாம் லிமிட் இருக்கிறது. இது ஒவ்வொரு வங்கியையும் பொருத்து மாறுபடும். ஒரு சில வங்கிகள் ரூ.1 லட்சம் வரை லிமிட் வழங்கியிருக்கிறது. அதாவது ரூ.1 லட்சம் வரை நீங்கள் பணம் அனுப்பலாம். அதன் பின்னர் அனுப்ப முடியாது.
பராமரிப்பு காரணங்கள்: ஒவ்வொரு வங்கியிலும் ஏராளமான வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்திருக்கின்றனர். எனவே வங்கியில் பயன்படுத்தப்படும் சாஃப்ட்வேருக்கும் அவ்வப்போது பராமரிப்பு அவசியம். அப்போதுதான் தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்படாமல் இருக்கும். அந்தந்த வங்கிகளே எந்தெந்த நேரத்தில் பராமரிப்பு செய்யப்படும்.. அந்த நேரத்தில் எந்தெந்த சேவைகள் கிடைக்காது என்பதை அதிகாரப்பூர்வ செய்திகள் வாயிலாக வெளியிடும். இதை பார்க்காதவர்கள் அந்த நேரத்தில் யுபிஐ சேவைகளை பயன்படுத்தும் போது இது போன்ற சிக்கல் வரலாம்.
பணம் அனுப்ப முடியாமல் போனால் என்ன செய்வது?: உங்களால் யுபிஐ மூலம் பணம் செலுத்த முடியவில்லை என்றால் மீண்டும் மீண்டும் முயற்சிக்காதீர்கள். வங்கிகள் பாதுகாப்பு கருதி இது போன்ற நடவடிக்கையை எடுத்திருந்தால் முழுமையாக உங்களுடைய அக்கவுண்ட்டை பிளாக் செய்ய வாய்ப்புள்ளது.
ஒருவேளை மெயின்டனன்ஸ் காரணமாக பரிவர்த்தனை செய்ய முடியவில்லையா என்பதையும் சரி பார்த்துக் கொள்ளுங்கள். சில வங்கிகளே உங்களுக்கு இது குறித்து அறிவிப்புகளை எஸ்எம்எஸ் அல்லது ஈமெயில் மூலமாக அனுப்பி விடும். அப்படி ஏதாவது செய்தி வந்திருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்வது நல்லது.
ஒரு சில மணி நேரங்கள் தாண்டியும் உங்களால் பணப்பரிவர்த்தனை செய்ய முடியவில்லை என்றால் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருக்கும் கஸ்டமர் கேர் சேவையை தொடர்பு கொள்ளுங்கள். வங்கி இணையதளங்களைப் போலவே போலி இணையதளங்கள் அதிகரித்துவிட்டது. எனவே நீங்கள் பயன்படுத்தும் இணையதளம் உண்மையானது தானா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள். ஏடிஎம் கார்டின் பின்புறமும் கஸ்டமர் கேர் நம்பர் கொடுக்கப்பட்டிருக்கும்.
வாடிக்கையாளர்கள் செய்ய வேண்டியது என்ன?: அவ்வப்போது கேஒய்சி விவரங்களை புதுப்பித்துக் கொள்வது அவசியம். மேலும் வங்கி ஆப்-களை பயன்படுத்தும் போது அவை அப்டேட் செய்யப்பட்டுள்ளதா என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
எதிர்பார்க்காத இடங்களில் பணம் செலுத்த முடியாமல் போனால் உங்கள் பணம் தவறான நபர்களுக்கு செல்லக்கூடாது என்பதற்காக வங்கி எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பதை தெரிந்து கொள்ளுங்கள். சிறிய அளவில் ஏற்படும் தாமதம் பிற்காலத்தில் பெரிய பண இழப்புகளை தடுக்க உதவும்.


Click it and Unblock the Notifications
