இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. குறிப்பாக யுபிஐ முறையில் ஜிபே, போன் பே, அமேசான் பே, பேடிஎம், பிம் யுபிஐ போன்ற செயலிகள் வாயிலாக தான் நாம் பெரும்பாலான பண பரிவர்த்தனைகளையே மேற்கொள்கிறோம்.
யுபிஐ பரிவர்த்தனைகள் வேகமாக வளர்ச்சி அடைந்தாலும் அதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்துவது பராமரிப்பது ஆகியவற்றுக்கு செலவாகிறது. இந்த செலவினை தற்போதைக்கு அரசு தான் ஏற்கிறது. இந்நிலையில் தான் மத்திய அரசு கடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் Payment and Settlement Systems Act சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இதனை அடுத்து யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு கட்டணங்கள் விதிக்கப்படும் என தகவல்கள் பரவின. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், குழப்பங்களை தீர்க்கும் வகையிலும் மத்திய நிதியமைச்சகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

நிதியமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ அரசிதழ் வெளியீட்டின் படி, RuPay டெபிட் கார்டு மூலம் மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகள் மற்றும் 2,000 ரூபாய் வரை செய்யப்படும் யுபிஐ பரிவர்த்தனைகள் ஆகியவை மின்னணு செலுத்துதல் முறைகள் (electronic modes of payment) என அதிகாரப்பூர்வமாக பட்டியலிடப்பட்டுள்ளன.
அதாவது இரண்டு டிஜிட்டல் முறைகளை பயன்படுத்தி பணம் செலுத்துபவர்கள் அல்லது பெறுபவர்கள் மீது, எந்தவொரு வங்கியோ அல்லது வழங்குநரோ (system provider) நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு கட்டணத்தையும் விதிக்க கூடாது என மத்திய அரசு தடை விதித்துள்ளது.
யுபிஐ முறை அறிமுகப்படுத்தப்பட்ட நாள் முதல் நுகர்வோர் அதாவது சாதாரண மக்களுக்கு இலவசமாகவே வழங்கப்பட்டு வருகிறது. இந்த புதிய சட்ட திருத்தங்களால் மக்கள் எந்தவொரு பரிவர்த்தனை கட்டணத்தையும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை; ஒவ்வொரு இந்தியரும் தொடர்ந்து எந்தவொரு கட்டணமுமின்றி உடனடி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளை செய்யலாம் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
தனிநபர்களுக்கு இடையே மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனைகள் (P2P - Person to Person) தொடர்ந்து முழுமையாக இலவசமாகவே தொடரும். வணிகர்களுக்கு மேற்கொள்ளப்படும் பெரும்பாலான பரிவர்த்தனைகளும் எந்தவித கட்டணமுமின்றி இலவசமாகவே இருக்கும்.
எதிர்காலத்தில் வர்த்தகர்களுக்கான கட்டமைப்பு மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கத்திற்காக, ஒரு குறிப்பிட்ட வரம்புக்கு மேல் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட வணிக பரிவர்த்தனைகளுக்கு மட்டும் மிக குறைந்த அளவிலான MDR - Merchant Discount Rate கொண்டுவரப்படலாம் என அரசு முன்பே தெரிவித்திருந்தது.
அப்படி ஒருவேளை கட்டணம் அறிமுகம் செய்யப்பட்டாலும், அது சாதாரண நுகர்வோரை பாதிக்காது; மாறாக, குறிப்பிட்ட வரம்பை தாண்டிய சில வணிக பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே, வழக்கமான டெபிட் அல்லது கிரெடிட் கார்டு கட்டணங்களை விட மிக குறைந்தளவில் பொருந்தும் என சொல்லப்படுகிறது.
அதாவது எம்டிஆர் கட்டணம் அறிமுகம் செய்யப்பட்டாலும் அது 2000 ரூபாய்க்கு மேல் உள்ள கட்டணங்களுக்கே பொருந்தும், மேலும் சாதாரண மக்களான நமக்கு எந்த ஒரு கட்டணமும் இல்லை மாறாக குறிப்பிட்ட வணிகங்களில் ஈடுபட்டுள்ள வணிகர்களுக்கு தான் குறைந்த சதவீதத்தில் கட்டணம் பொருந்தும். இது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவும் இல்லை நடைமுறைக்கு வரவும் இல்லை.
எனவே ரூ.2,000 வரையிலான சிறிய தொகையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் எவ்வித கட்டணமும் இன்றி இலவசமாக தொடரும், அப்படியே எம்டிஆர் வந்தாலும் சாதாரண மக்களாகிய நமக்கு அதில் எந்த ஒரு கட்டணமும் இல்லை வழக்கம் போல இலவசமாகவே பயன்படுத்தலாம் என்பது தான் அரசின் இந்த அறிவிப்பின் நோக்கமாகும்.


Click it and Unblock the Notifications


