அமெரிக்கா - ஈரான் மத்தியிலான ராணுவ போர் தற்போது வர்த்தக போராக மாறியுள்ளது, ஈரான் நாட்டை உலக நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தும் விதமாக டிரம்ப் அரசு Economic D-Day பெயரில் நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசன்ட் நேற்று நடந்திய முக்கியமான செய்தியாளர் சந்திப்பில் பேசிய போது ஈரான் உடன் வர்த்தகம், நிதி பரிமாற்றம் மற்றும் அந்நாட்டிற்கு உதவும் நாடுகளுக்கு கடைசி எச்சரிக்கை என தெரிவித்தார். அமெரிக்க அரசு கனடா மீதான 50 சதவீத வரியை விதித்துள்ளதை தொடர்ந்து ஈரான் மீது டார்கெட் செய்யப்பட்டு உள்ளது.

அமெரிக்கா கடந்த சில வாரங்களாக ராணுவ தாக்குதலை நிறுத்திவிட்டு மீண்டும்.. வரி, வர்த்தக கட்டுப்பாடு, நிதி சேவை முடக்கம் என வழியில் இறங்கியுள்ளது. இதன் நீட்சியாக ஈரான் உடனான அமெரிக்காவின் போர் 6 மாதங்களை எட்டியுள்ள நிலையில், இனி ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மற்றும் நிறுவனங்கள் மீது இரண்டாம் நிலை தடைகளையும், கட்டுப்பாடுகளையும் விரிவுபடுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.
இதில் முக்கியமாக ஸ்காட் பெசென்ட் உலக நாடுகளுக்கு விடுத்த எச்சரிக்கையில், உலக நாடுகள் ஈரானுடன் வர்த்தக உறவை உடனே துண்டிக்க வேண்டும், இல்லையெனில் டாலர் அடிப்படையிலான நிதி அமைப்பில் இருந்து அந்த நாடு அல்லது நிறுவனம் மொத்தமாக துண்டிக்கப்படும் என இறுதி எச்சரிக்கை விடுத்தார்.
இந்த அறிவிப்பின் மூலம் ஈரானின் அனைத்து வர்த்தக, நிதி ஆதார வழிகளை முடக்க அமெரிக்கா முயற்சி செய்கிறது. சரி இதனால் இந்தியாவுக்கு எத்தகைய பாதிப்பு ஏற்படும் என்பது தான் தற்போதைய முக்கியமான கேள்வியாக உள்ளது.
மேலும் அமெரிக்க கருவூல அமைப்பு தற்போது ஈரான் அமைப்பு கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கும், நிதி பரிமாற்றத்திற்கும் பயன்படுத்தும் அனைத்து நெட்வொர்க்கையும் தனது கண்காணிப்பில் வைத்துள்ளது. இதேபோல் ஈரான் தனது பொருளாதாரத்தை மேம்படுத்த பயன்படுத்தும் 5 துறைகளான டிஜிட்டல் சொத்துக்ள், டெக்னாலஜி, தங்கம், ஏவியேஷன், ஷிப்பிங் போன்ற துறைகளை முழு கண்காணிப்பில் வைக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது..?
1. கச்சா எண்ணெய் விலை
ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் மற்றும் மூலப்பொருள் கப்பல் போக்குவரத்து இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில், மறைமுகமாக சந்தைக்கு வரும் ஈரான் கச்சா எண்ணெய்யும் அமெரிக்காவின் இத்தடையால் பாதித்கப்படும் பட்சத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்வது தொடரும். இந்தியா பல வழியில் மறைமுகமாக ஈரானில் இருந்து எரிபொருள், எரிவாயு வாங்கியது குறிப்பிடத்தக்கது. இதை உடனடியாக நிறுத்த வேண்டிய கட்டாயம் தொடரும்.
2. இந்திய நிறுவனங்களுக்கு செக்
ஈரானுடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ வர்த்தகம் செய்யும் இந்திய நிறுவனங்கள் இனி வரும் காலக்கட்டத்தில் வர்த்தகத்தை நிறுத்த வேண்டும் இல்லையெனில் அமெரிக்காவின் 2ஆம் நிலை தடைகளை எதிர்கொள்ள வேண்டும். இதில் முக்கியமாக டாலர் அடிப்படையிலான வர்த்தகத்தை செய்யவதில் இருந்து அந்த நிறுவனங்கள் தடை செய்யப்படும்.
3. தங்கம்
அமெரிக்கா ஈரான் மீதான கட்டுப்பாட்டில் தங்கத்தையும் கொண்டு வந்துள்ளது, இதனால் ஈரானிடம் இருக்கும் தங்கத்தை உலக சந்தையில் விற்க முடியாது. இதைவிட முக்கியமாக ஈரான் தொடர்புடைய வர்த்தகத்தில்ல தங்கத்தை பேமெண்ட் ஆகவும் பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.
4. இந்தியாவின் டெக் மற்றும் டிஜிட்டல் துறை
டிஜிட்டல் சொத்துகள் (Digital Assets), தொழில்நுட்பம் (Technology), விமான போக்குவரத்து (Aviation), கப்பல் போக்குவரத்து (Shipping) ஆகிய துறைகளும் அமெரிக்க கண்காணிப்புக்குள் வந்துள்ளன. இதனால் இந்த துறைகளில் செயல்படும் இந்திய நிறுவனங்கள், ஈரான் தொடர்புகள் இருந்தால் கூடுதல் நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.
5. கப்பல் போக்குவரத்து
அமெரிக்காவின் 2ஆம் நிலை தடைகள் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் இயக்கப்படும் கப்பல்களுக்கான கட்டணம், காப்பீட்டு கட்டணம் உயர வாய்ப்பு உள்ளது. இதனால் இந்தியாவுக்கான இறக்குமதி செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
சீனா தான் சிம்மசொப்பனம்
பல ஆண்டுகளாக ஈரானின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் கொள்முதல் நாடாக சீனா உள்ளது. இத்தகைய நிலையில் அமெரிக்காவின் 2ஆம் நிலை தடைகளை சீனா எப்படி எதிர்கொள்ள போகிறது, இதேபோல் அமெரிக்காவும் சீனா மீது எத்தகைய வரி மற்றும் தடைகளை விதிக்கும் என்பது தான் தற்போது கவனிக்க வேண்டியவிஷயமாக உள்ளது.
இறுதியாக அமெரிக்காவின் இந்த தடைகள் இந்தியாவை நேரடியாக பாதிக்காது. காரணம் இந்தியா - ஈரான் மத்தியிலான வர்த்ததம் என்பது கடந்த 5 வருடத்தில் 1.6 - 2.35 பில்லியன் டாலர் அளவில் மட்டுமே உள்ளது. 2022-23ஆம் நிதியாண்டில் அதிகப்படியான வர்த்தகம் பதிவாகியுள்ளது. இரு நாடுகள் மத்தியிலான வர்த்தகத்தில் இந்தியா தான் உபரி ஏற்றுமதி கொண்ட நாடாக உள்ளது. அமெரிக்காவில் இத்தடை காரணமாக ஈரானுக்கான இந்தியாவின் எற்றுமதி பாதிக்க கூடும்.


Click it and Unblock the Notifications