உலகின் முன்னணி ஸ்மார்ட்போன், கணினி மற்றும் டெக் நிறுவனமாகத் திகழும் ஆப்பிள் தனது உற்பத்தி தளத்தில் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்துள்ளது. குறிப்பாகச் சீனாவில் அமைந்திருந்த தனது உற்பத்தி தளத்தைக் கிட்டதட்ட 80 சதவீதம் தனது கூட்டணி நிறுவனங்கள் உடன் இந்தியாவிற்கு மாற்றியுள்ளது.
இதன் மூலம் அமெரிக்க நிறுவனமான ஆப்பிள்-க்கு இந்தியா இனி முக்கிய உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தளமாக இருக்கும். இந்நிலையில் இந்தியாவில் புதிதாக அமைக்கப்பட்ட தொழிற்சாலைகளில் சில பிரச்சனைகள் இருந்தாலும் அனைத்தையும் சமாளித்து அடுத்தடுத்த பணிகளைச் செய்துவருகிறது.
இந்நிலையில் இந்திய உற்பத்தி பணிகளில் முக்கியமான முடிவை ஆப்பிள் நிர்வாகம் எடுத்துள்ளது.
அமெரிக்கா - சீனா பிரச்சனை
அமெரிக்கா - சீனா இடையே ஏற்பட்ட வர்த்தகப் போரின் காரணமாகச் சீனாவில் இருக்கும் பல முன்னணி அமெரிக்க நிறுவனங்களின் உற்பத்தி தளம் இந்தியா, வியட்நாம், பங்களாதேஷ், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குச் சென்றது. இதில் முக்கியமாக ஆப்பிள் தனது பெரும் பகுதி உற்பத்தி பணிகளைக் குறிப்பாக அதிகம் விற்பனை செய்யப்பட்டும் ஸ்மார்ட்போன் உற்பத்தி பணிகளை இந்தியாவிற்குக் கொண்டு வந்தது.
இந்தியாவில் உற்பத்தி
இதன் மூலம் இந்தியாவில் தற்போது ஐபோன் எஸ்ஈ 2020, ஐபோன் எக்ஸ்ஆர், ஐபோன் 11 ஆகியவற்றைத் தனது உற்பத்தி கூட்டணி நிறுவனங்களான பாக்ஸ்கான் மற்றும் விஸ்திரான் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் தயாரித்து வருகிறது.
ஐபோன்12 தயாரிப்பு
இந்தியாவில் ஆப்பிள் ஸ்மார்ட்போன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகள் நிலையான வேகத்தில் வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், தற்போது ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் ஐபோன்12 மாடல் போன்களைத் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
உற்பத்தி தரம்
சமீபத்தில் ஸ்மார்ட்போன் சந்தையைக் கலக்கிய ஒரு முக்கியமான ஆப்பிள் தயாரிப்பாக இருக்கும் ஐபோன்12 இந்தியாவில் தயாரிப்பதன் மூலம் அதன் இந்திய நிறுவனங்களில் அதன் உற்பத்தித் திறன் மேம்பட்டதை காட்டுகிறது. இதுமட்டும் அல்லாமல் புதிய மாடல்களுக்குச் சந்தையில் டிமாண்டு அதிகமாக இருக்கும் காரணத்தால் உற்பத்தி எண்ணிக்கையும் அதிகமாக இருக்கும்.
உள்நாட்டு விற்பனை
தற்போது முதற்கட்டமாக ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்12 உற்பத்தி உள்நாட்டுத் தேவைக்காக மட்டுமே தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதேபோல் ஐபோன்12 ப்ரோ பிரிவு போன்களைத் தொடர்ந்து சீனாவில் இருந்து தான் ஆப்பிள் இறக்குமதி செய்ய உள்ளது.
விற்பனையில் வளர்ச்சி
இதேவேளையில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஆப்பிள்-ன் வர்த்தகம் ஆக்டோபர் - டிசம்பர் 2020 காலாண்டில் 4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் வெறும் 2 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அடுத்த சில மாதங்களில் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் ஐபோன்12 விலை குறைய வாய்ப்பு உள்ளது.