அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களின் ஆட்சி காலத்தில், கொரோனா பாதிப்பால் பல கோடி அமெரிக்கர்கள் வேலைவாய்ப்பை இழந்து நிற்கும் நிலையில் வெளிநாட்டில் இருந்து வரும் இந்தியர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதை குறைக்கும் வகையில் பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.இந்தக் கட்டுப்பாடுகளுக்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது உடன் நீதிமன்றத்தில் அரசு அறிவிப்புக்கு எதிராக வழக்கும் தொடுக்கப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் அமெரிக்க நீதிபதி டிரம்ப் அரசின் இரண்டு
முக்கியமான உத்தரவுகளை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
2 முக்கிய உத்தரவுகள்
அமெரிக்காவிற்கு வரும் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் டிரம்ப் அரசு, வெளிநாட்டு ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பள அளவீட்டை கிட்டத்தட்ட அமெரிக்க மக்களின் இணையான சம்பளத்திற்கு உயர்த்தி அறிவித்தார். இதேபோல் ஸ்பெஷாலிட்டி வேலை பிரிவில் பல முக்கியப் பிரிவுகளை நீக்க டிரம்ப் அரசு உத்தரவிட்டது.
வழக்கு
இவ்விரு உத்தரவுகளை எதிர்த்து அமெரிக்காவின் சேம்பர் ஆப் காமர்ஸ், தி பே ஏரியா கவுன்சில் மற்றும் இன்னும் பல அமைப்புகள் இணைந்து அமெரிக்காவின் ஹோம்லேண்டு செக்யூரிட்டியை எதிர்த்து வழக்குத் தொடுத்தது.
இந்த வழக்கில் அரசு மக்களின் கருத்தைக் கேட்காமல் அவசர அவசரமாக விசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோம்லேண்டு செக்யூரிட்டி
இந்த வழக்கின் விசாரணையின் போது ஹோம்லேண்டு செக்யூரிட்டி தரப்பில் இருந்து கொரோனா பாதிப்பின் காரணமாக நாடு முழுவதும் அதிகளவிலான அமெரிக்க மக்கள் வேலைவாய்ப்புகளை இழந்தனர். இதைக் கட்டுப்படுத்தவும், அமெரிக்க மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காகவே இந்த உத்தரவு அறிவிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளது.
ஹெச்1பி விசா விண்ணப்பம்
இதேபோல் இந்தப் புதிய உத்தரவால் கடந்த சில வருடத்தில் ஹெச்1பி விசா விண்ணப்பம் செய்த மக்களில் மூன்றில் 1 பங்கு விண்ணப்பங்களுக்கு விசா கிடைக்காது என்பது தோராயக் கணக்காக உள்ளது.
இந்தியாவில் இருந்து வேலைக்காக அமெரிக்கா செல்லும் 80 சதவீதம் பேர் ஹெச்1பி விசா வாயிலாகத் தான் செல்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெப்ரி வையிட் நீதிபதி
இந்த வழக்கை விசாரித்த அமெரிக்க நீதிமன்ற நீதிபதி ஜெப்ரி வையிட், அரசு வெளிப்படைத் தன்மை இல்லாமல் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதேபோல் கொரோனா காரணமாக வேலைவாய்ப்பு இழப்பைக் கட்டுப்படுத்த இந்தக்
கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டது என்ற காரணத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்தார்.
அக்டோபரில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடு
ஹெச் 1பி விசா பெறும் வெளிநாட்டு ஊழியர்கள் பணியில் அமர்த்தும் போது, 4 சம்பள அளவுகளில் பல்வேறு துறை சார்ந்த பணியிடங்களில் அமர்த்தப்படுகின்றனர். இந்தச் சம்பள அளவீடுகள் டிரம்ப் அரசின் உத்தரவால் சில பிரிவுகளில் இரட்டிப்பு அளவிலும், சில பிரிவில் அமெரிக்கர்களின் சம்பள அளவீடுக்கு இணையான அளவில் உயர்த்தப்பட்டுள்ளது.
சம்பள அளவீடுகள்
சம்பள அளவீடு 1 -ல் தற்போது அமெரிக்கர்கள் வாங்கும் சம்பளத்தில் 17 சதவீதம் சம்பளத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் பணியில் அமர்த்தப்படுகிறது. இது புதிய உத்தரவால் 45 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
இதேபோல் 2வது சம்பள பிரிவில் 34 சதவீதமாக இருந்த அளவீடு 62 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
3வது சம்பள பிரிவில் 50 சதவீதமாக இருந்த அளவீடு 78 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
4வது சம்பள பிரிவில் 67 சதவீதமாக இருந்த அளவீடு தற்போது 95 சதவீதமாக உயர்த்தப்பட்டது.
சிறப்பு வேலைகள்
இதேபோல் ஹெச் 1பி விசாவில் ‘speciality occupation' என்ற சிறப்பு வேலைகள் பிரிவுகளில் இருக்கும் படிப்பு மற்றும் பட்டங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் சில பிரிவில் பட்டம் பெற்றுச் சிறந்து விளங்குவோருக்கு மட்டுமே ‘speciality occupation' பிரிவின் கீழ் ஹெச் 1பி விசா வழங்கப்படும் என விதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிட்ட சில ஒப்பந்த பிரிவு ஊழியர்களுக்கு விசா காலம் குறைக்கப்பட்டுள்ளது.
ரத்து
தற்போது அமெரிக்க நீதிபதி ஜெப்ரி வையிட் உத்தரவின் படி சம்பள அளவீடு குறித்து அறிவிப்புகளும், ‘speciality occupation' பிரிவின் கட்டுப்பாடுகளும் முழுமையாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இதனால் இந்தியர்களுக்கு ஹெச்1பி விசா பெறுவதில் கூடுதல் வாய்ப்புகள் உருவாகியுள்ளது என்றால் மிகையில்லை.