அமெரிக்காவில் சென்று உயர்கல்வி கற்க வேண்டி விசாவுக்கு விண்ணப்பம் செய்திருந்த மாணவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் அமெரிக்க அரசு, விசா வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறது. இதனால் தங்களின் அமெரிக்க மேற்படிப்பு கனவு கலைந்து போகுமோ என ஆயிரக்கணக்கான மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
அமெரிக்கா சென்று கல்வி கற்க விரும்பும் மாணவர்கள் F-1 மாணவர் விசாவுக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும். அப்படி கடந்த ஆண்டில் விண்ணப்பம் செய்த பெரும்பாலான இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கப்படவில்லை. அமெரிக்க வெளியுறவு துறை வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, இந்திய மாணவர்களுக்கான விசா வழங்கல் 62% வரை குறைந்துள்ளது.

அமெரிக்காவில் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தான் அதிகமான மாணவர் சேர்க்கை என்பது நடைபெறும். குறிப்பாக இந்திய மாணவர்கள் இந்த காலக்கட்டதில் விசா பெற்று அமெரிக்க பல்கலைகழகங்களுக்கு செல்வார்கள். இது கடந்த ஆண்டில் மட்டும் வழக்கத்தை விட 62% முதல் 69% வரை சரிந்துள்ளது.
2024ஆம் ஆண்டில் இதே காலக்கட்டத்தில் 58,000-க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் எஃப் 1 விசா பெற்றனர். ஆனால் இது தற்போது வெறும் 22,000 என குறைந்துள்ளது. உலக அளவில் அமெரிக்காவின் F-1 விசா வழங்குவது ஒட்டுமொத்தமாக 36% வரை குறைந்துள்ளது. இதில் இந்திய மாணவர்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மே மாத இறுதியில் அமெரிக்க வெளியுறவுத்துறை மாணவர் விசா நேர்காணல்களை கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைத்தது. இது பீக் சீசனில் விண்ணப்பித்த மாணவர்களை பாதித்தது. விசா விண்ணப்பதாரர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் வெளியிட்ட வந்த சமூக வலைதள பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது. இதனால் பின்னணி மற்றும் பாதுகாப்புச் சோதனைகள் தீவிரமடைந்து, விசா வழங்குவதில் கடுமையான தாமதம் ஏற்பட்டது என சொல்லப்படுகிறது.
டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட கடுமையான கொள்கைகள், விசா கால வரம்புகள் குறித்த திட்டங்கள் மற்றும் மாணவர்களின் சட்டப்பூர்வ அந்தஸ்தில் ஏற்பட்ட குழப்பங்கள் உலக அளவில் மாணவர்களிடையே ஒரு வித நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளன.
இதற்கிடையே அமெரிக்க அரசு கல்லூரிகளுக்கு வழங்கிய நிதியை குறைத்ததால் பல பல்கலைக்கழகங்கள் தங்களின் முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்புகளுக்கான இடங்களை குறைத்து கொண்டன. இதனால் வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கையும் குறைந்தது என சொல்லப்படுகிறது. இந்திய மாணவர்களுக்கு விசா வழங்காததால் அமெரிக்காவுக்கு தான் நஷ்டம் என சொல்லப்படுகிறது.
அமெரிக்க பொருளாதாரத்திற்கு சர்வதேச மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 43 பில்லியன் டாலர்களை கல்வி கட்டணம் மற்றும் இதர செலவுகள் மூலமாக பங்களிக்கின்றனர். மாணவர்களின் வருகை குறைந்துள்ளதால் பல்கலைக்கழகங்களின் நிதி நிலை பாதித்துள்ளது, அதே வேளையில் அரசும் நிதி உதவிகளை குறைத்துவிட்டது.
அமெரிக்காவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் எனப்படும் STEM படிப்புகளில் முதுகலை மற்றும் முனைவர் பட்ட படிப்புகளில் இந்திய மாணவர்களின் பங்களிப்பு மிக அதிகம். இந்திய மாணவர்கலுக்கு விசா குறைக்கப்பட்டதால் இந்த ஆராய்ச்சி படிப்புகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications

