2018ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையாக அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் புதன்கிழமை தனது அடிப்படை வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் அதாவது 0.25 சதவீதம் உயர்த்தியது. இதன் மூலம் பல மாதங்களாகப் பெடரல் ரிசர்வ் கூறியதை செய்துக்காட்டியுள்ளது.
அமெரிக்க மத்திய வங்கி
அமெரிக்க மத்திய வங்கி அடுத்தடுத்த நாணய கொள்கை கூட்டத்திலும் தனது வட்டி விகிதத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ள நிலையில் இந்த ஆண்டின் இறுதிக்குள் வரலாற்று உச்சத்தைத் தொட்டு உள்ள பணவீக்கத்தை 1.75 சதவீதம் முதல் 2 சதவீதத்திற்குள்ள கொண்ட வர இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பிப்ரவரியில் பணவீக்க அளவுகள் 7.9 சதவீதமாக உயர்ந்தது.
பங்குச்சந்தை எப்படிப் பாதிக்கும்
ரஷ்யா - உக்ரைன் போர் அமெரிக்கப் பணவீக்கத்தில் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வட்டி உயர்வு கட்டாயமாக மாறியுள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் வட்டி உயர்வு பங்குச்சந்தையை எப்படிப் பாதிக்கும்.
இந்திய, அமெரிக்கப் பங்குச்சந்தை
உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வுக்குப் பின் அமெரிக்கச் சந்தைகள் 2 சதவீதமும், இந்திய பங்குச் சந்தை வியாழக்கிழமை 1 சதவீதமும் உயர்வுடன் உள்ளது.
கச்சா எண்ணெய்
மேலும் கச்சா எண்ணெய் ஒரு பேரல் 99 டாலருக்கும் குறைவாக இகுக்கும் காரணத்தால் வர்த்தகச் சந்தையைப் பாதிக்கும் காரணிகள் பெரிய அளவில் குறைந்துள்ள காரணத்தால் பங்குச்சந்தை உயர்வுடன் காணப்படுகிறது.
மூன்று முக்கியக் காரணிகள்
மேலும் பங்குச்சந்தையைப் பாதித்து வந்த மூன்று முக்கியக் காரணிகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஐந்து இந்திய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள், அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித முடிவுகள் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போருக்குத் தீர்வு காணும் முடிவில் இரு நாடுகளும் முடிவெடுத்துள்ளது.
வளர்ச்சி பாதை
இதனால் பங்குச்சந்தையும், பொருட்களின் விலைவாசியும், பணவீக்கம் உயர்த்தும் காரணிகளும் தற்போது பெரிய அளவில் இல்லை என்பதால் பங்குச்சந்தைகள் தொடர்ந்து வளர்ச்சி பாதையில் உள்ளது.
சீனாவில் கொரோனா
ஆனால் சீனாவில் பரவி வரும் கொரோனா தொற்று மூலம் சப்ளை செயின் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் அமெரிக்காவின் வட்டி விகித உயர்வு பங்குச்சந்தையைப் பெரிய அளவில் பாதிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
இந்திய ரிசர்வ் வங்கி
அமெரிக்கப் பெடர்ல் வங்கியின் 0.25 சதவீத வட்டி உயர்வு உலக நாடுகளில் அனைத்து முன்னணி நாடுகளையும் வட்டி உயர்த்த வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இந்தியாவில் ரீடைல் பணவீக்க அளவீடுகள் ரிசர்வ் வங்கி இலக்கிற்குள் இருக்கும் காரணத்தால் ஏப்ரல் 6 முதல் 8ஆம் தேதி வரையில் நடக்கும் நாணய கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதத்தை மாற்றாது என எதிர்பார்க்கப்படுகிறது
அன்னிய முதலீடுகள்
பொதுவாக அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வட்டியை உயர்த்தினால் வெளிநாட்டுச் சந்தையில் இருக்கும் அன்னிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறும், ஆனால் கடந்த 1 மாதமாகப் பல காரணங்களுக்கான இந்திய சந்தையில் இருக்கும் அன்னிய முதலீடுகள் போதுமான அளவிற்கு வெளியேறியுள்ளது. இதனாலேயே இன்று பெரிய அளவிலான முதலீடு வெளியேறவில்லை.