பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியானது அதன் வட்டி விகிதத்தினை மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 0.25% அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் நடப்பு ஆண்டில் இன்னும் நடக்கவிருக்கும் 6 கூட்டத்திலும் அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மார்ச் 15 மற்றும் 16 தேதிகளில் நடந்த கூட்டத்தின் மத்தியில், இந்த அதிரடியான முடிவானது வெளியாகியுள்ளது. இது அமெரிக்காவில் தொடர்ந்து பணவீக்க விகிதமானது உச்சம் தொட்டு வரும் நிலையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
வட்டி அதிகரிப்பு
அமெரிக்காவில் பணவீக்கம் என்பது 40 ஆண்டுகளில் இல்லாத அளவு உச்சம் தொட்டுள்ளது. இது தொடர்ந்து அதிகரித்து வரும் எரிபொருள் விலைக்கு மத்தியில் அதிகரித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் தான் இந்த வட்டி அதிகரிப்பானது வந்துள்ளது. நடப்பு ஆண்டில் இன்னும் நடக்கவிருக்கும் 6 கூட்டத்திலும் 1.9% ஒருங்கிணைக்கப்பட்ட விகிதமாக அதிகரிக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் அல்ல 2023ம் ஆண்டிலும் மூன்று முறை உயர்வு இருக்கலாமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது..
கடனில் தாக்கம் ஏற்படலாம்
இது கடன் மீதான வட்டி விகிதத்தில் உடனடியாக தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைசியாக இவ்வங்கியானது கடந்த 2018ல் வட்டி விகிதத்தினை அதிகரித்த நிலையில், அதன் பிறகு கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரும் இழப்புகள் ஏற்பட்டது. இதனை ஈடுகட்டும் விதமாக வட்டி விகிதமானது மாற்றம் செய்யப்படவில்லை.
வளர்ச்சியினை மெதுவாக்கலாம்
அமெரிக்காவின் மத்திய வங்கியானது பொருளாதாரம் மிக பின் தங்கியிருந்த நிலையில், அதனை ஆதரிக்கவும், பணியமர்த்தலை ஆதரிக்கவும் வட்டி விகிதத்தினை குறைவாகவே வைத்திருந்தது. ஆக தற்போது அதிகரித்துள்ள வட்டி விகிதமானது வளர்ச்சி விகிதத்தில் அழுத்தத்தினை ஏற்படுத்தினாலும், வரலாறு காணாத உச்சத்தில் உள்ள பணவீக்கத்தினையும் கட்டுப்படுத்தும்.
பிப்ரவரி மாத நிலவரம்
கடந்த பிப்ரவரி மாதத்திலேயே பணவீக்க விகிதமானது 7.9% ஆக உச்சம் தொட்டிருந்த நிலையில், தற்போது அதனுடன் உக்ரைன் - ரஷ்யா பிரச்சனையும் சேர்ந்துள்ளது. இது மேற்கொண்டு விலைவாசியை அதிகரித்துள்ளது. இது மேலும் பணவீக்கத்தினை தூண்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீடுகள் வெளியேறலாம்
பொதுவாக ஒரு நாட்டின் வட்டி விகிதமானது அதிகரிக்கும் பட்சத்தில், அது மற்ற நாடுகளில் உள்ள அன்னிய முதலீடுகள் வெளியேற காரணமாக அமையலாம். குறிப்பாக பங்கு சந்தை, பத்திர சந்தைகளில் இருக்கும் முதலீடுகள் வெளியேறலாம். அந்த வகையில் சர்வதேச அளவில் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவின் வட்டி அதிகரிப்பானது, இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் உள்ள முதலீடுகளை வெளியேற வழிவகுக்கும்.
பங்கு சந்தையில் தாக்கம் இருக்கலாம்
மேலும் இது பாதுகாப்பான சந்தைகளில் முதலீடுகளை செய்ய வழிவகுக்கும். குறிப்பாக இந்திய பங்கு சந்தையில் மட்டும் கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து சுமார் 2 லட்சம் கோடி அன்னிய முதலீடுகள் வெளியேறியுள்ளன. இது இனி வரவிருக்கும் நாட்களில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.
இந்தியாவினை வட்டி அதிகரிக்க ஊக்குவிக்கலாம்
இந்தியாவிலும் சமீப காலமாக ரெப்போ விகிதமானது வளர்ச்சியினை ஊக்குவிக்கும் விதமாக அதிகரிக்கப்படவில்லை. எனினும் தற்போது அமெரிக்காவில் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவினையும் அதிகரிக்க தூண்டலாம். இந்தியாவில் பெரியளவில் முதலீடுகள் வெளியேறினால் சந்தையில் பெரும் சரிவு ஏற்படலாம். அதோடு இந்திய வங்கிகளிலும் கடன் விகிதங்களை அதிகரிக்க வழிவகுக்கும்.
மறைமுக தாக்கம் என்ன?
பல அமெரிக்க நிறுவனங்கள் இந்தியாவில் அதன் செயல்பாடுகளை செய்து வரும் நிலையில், அமெரிக்காவில் வட்டி விகிதம் அதிகரிக்கபட்டுள்ளதால் அது செலவினை குறைக்க தூண்டலாம். குறிப்பாக உற்பத்தியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம். எனினும் இதனால் நேரிடையாக தாக்கம் இல்லையென்றாலும், மறைமுகமாக நிறுவனங்கள் சில பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம்.