அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை எப்போது உயர்த்தும் என உலக நாடுகளின் பங்குச்சந்தைகள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், நேற்று நள்ளிரவில் அதற்கான அறிவிப்பு வெளியானது.
அதன்படி, அமெரிக்க ஃபெடரல் வங்கி 0.50 சதவீதமாக இருந்துவந்த வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் உயர்த்தி 1 சதவீதமாக அறிவித்துள்ளது. 20 வருடங்களுக்குப் பிறகு பெடரல் வங்கி இந்த அளவிற்கு வட்டியை உயர்த்தியுள்ளது என கூறுகின்றனர்.
பணவீக்கம்
இந்தியாவில் பணவீக்கம் அதிகம் உள்ளதால், ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தைப் புதன்கிழமை 0.40 சதவீதம் உயர்த்தியது. அதை உறுதி செய்வது போலவே, அமெரிக்க ஃபெடரல் வங்கியும் பணவீக்கம் அதிகம் உள்ளதால் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளதாக ஃபெடரல் வங்கி தலைவர் ஜெரோம் பவல் தெரிவித்தார்.
மீண்டும் உயர வாய்ப்பு
அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதம் குறித்து ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் நடக்க உள்ள கூட்டங்களில் இன்னும் 2 அரைப்புள்ளிகள் வரை வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிக்க வாய்ப்புள்ளதாகவும் ஜெரோம் பவல் கூறியுள்ளார்.
அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகள்
பெடரல் வங்கியின் வட்டி விகித உயர்வு அறிவிப்பை அடுத்து, அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகள் நாஸ்டாக் மற்றும் S&P 500 உள்ளிட்டவை 3 சதவீதம் வரை உயர்ந்து வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றன.
SGX நிப்டி
சிங்கப்பூர் SGX நிப்டி இன்று காலை 7:30 மணிக்கு 89 புள்ளிகள் என 0.53 சதவீதம் சரிந்து 16,843.20 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்திய பங்குச்சந்தையைப் பாதிக்குமா?
பெடரல் வங்கி எப்போது எல்லாம் வட்டி விகிதத்தை உயர்த்துகிறதோ அப்போது எல்லாம் இந்திய பங்குச்சந்தை குறியீடும் சரியும். எனவே இன்று இந்திய பங்குச்சந்தை சரிவுடன் தொடங்க வாய்ப்புகள் உள்ளது.
ரூபாய் மதிப்பு
இதனால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பிலும் சரிவு ஏற்படலாம். அமெரிக்கக் கடன் பத்திரங்கள் லாபகரமானதாக மாறும். இந்திய பங்குச்சந்தையில் உள்ள முதலீடுகள் வெளியேறும். ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடையும்.
செலவு அதிகரிக்கும்
சர்வதேச சந்தையில் நாம் அமரிக்க டாலரை பயன்படுத்தித்தான் அதிகளவில் கச்சா எண்ணெய், தங்கம் மற்றும் பல்வேறு பொருட்களை இறக்குமதி செய்கிறோம். எனவே இறக்குமதிக்கான செலவுகள் அதிகரித்து விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ள உள்ளன.
தனியார் நிறுவனங்கள்
வணிக வளர்ச்சிக்காக வெளிநாடுகளிலிருந்து இந்திய தனியார் நிறுவனங்கள் கடன் பெற்று இருந்தால் அதற்கான வட்டி உயர்ந்து செலவுகள் அதிகரிக்கும். அதனால் அவர்களது லபமும் சரியும்.