சீனாவின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் நிதியியல் சேவை பிரிவான ஆன்ட் குரூப்-ன் மாபெரும் ஐபிஓ திட்டத்தைச் சீன அரசு பல்வேறு காரணங்களால் முடக்கிய நிலையில், மீண்டும் ஐபிஓ வெளியிட வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலை சீனாவில் உருவாகியுள்ளது.
இந்தச் சூழ்நிலையில் அமெரிக்காவின் முன்னணி சொத்து மேலாண்மை நிறுவனமான Fidelity Investments ஆன்ட் குரூப் நிறுவனத்தில் முதலீடு செய்து கைப்பற்றி இருந்த பங்குகளின் மதிப்பைப் பாதியாகக் குறைத்துள்ளது என வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
ஜாக் மா-வின் ஆன்ட் குரூப்
சீன அரசின் நெருக்கடியில் சிக்கியிருக்கும் ஜாக் மா-வின் ஆன்ட் குரூப் நிறுவனம் தற்போது பல்வேறு நிர்வாக நெருக்கடியில் மட்டும் அல்லாமல் வர்த்தகப் பாதிப்புகளையும் எதிர்கொண்டு வருகிறது. இதற்கிடையில் சில வாரங்களுக்கு முன்பு சீன அரசு ஆன்ட் குரூப் மீது தொடுத்த மோனோபோலி வழக்கும் அரசுக்குச் சாதகமாக வந்தது மட்டும் அல்லாமல் அதிகப்படியான அபராதமும் விதிக்கப்பட்டது.
ஆன்ட் குரூப்-ன் எதிர்காலம்
இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஆன்ட் குரூப்-ன் எதிர்காலம் வெளிநாட்டில் மட்டும் அல்லாமல் சீனாவிலேயே கேள்விக்குறியாக மாறியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் தான் இந்நிறுவனத்தின் மீது முதலீடு செய்துள்ள அமெரிக்க முதலீட்டு நிறுவனங்கள் தங்களிடம் இருக்கும் பங்குகளை மதிப்பீடு செய்து வருகிறது.
பாதியாகக் குறைந்த மதிப்பீடு
2020 ஆகஸ்ட் மாதம் அலிபாபா கீழ் இயங்கும் ஆன்ட் குரூப் நிறுவனத்தின் மதிப்பு மட்டும் 295 பில்லியன் டாலர் மதிப்பிடப்பட்டது, இதற்குப் பின்பு தான் ஐபிஓ தடை, சீன அரசு நெருக்கடி, வழக்கு, அபராதம் எனப் பலதரப்பட்ட பாதிப்புகள் உருவானது. இதன் வாயிலாகத் தற்போது ஆன்ட் குரூப்-ன் மதிப்பு 144 பில்லியன் டாலராகக் குறைத்துள்ளது அமெரிக்க முதலீட்டு நிறுவனமான Fidelity Investments.
37 பில்லியன் டாலர் ஐபிஓ
ஆன்ட் குரூப் 2020 நவம்பர் மாதத்தில் உலகிலேயே மிகப்பெரிய ஐபிஓ-வை சீனா மற்றும் ஹாங்காங் பங்குச்சந்தைகளில் வெளியிடத் திட்டமிட்டது. சுமார் 37 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐபிஓ மட்டும் வெளியாகியிருந்தால் இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 320 பில்லியன் டாலரை தாண்டியிருக்கும்.