தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு சமீப வருடங்களாகவே மிக மோசமான காலமாக இருந்து வருகிறது எனலாம். ஏனெனில் பொருளாதார மந்த நிலை, பலத்த போட்டி, இதனை தொடர்ந்து ஏஜிஆர் பிரச்சனை என தொடர்ந்து அடுத்தடுத்த அடிகளை வாங்கிக் கொண்டுள்ளன.
அதிலும் பல அடி வாங்கியது வோடபோன் தான். தன்னால் தணித்து போட்டியிட முடியாமல் தான், ஐடியாவை விலைக்கு வாங்கியது. ஆனால் அப்போதும் கூட, ஜியோவின் அதிரடி சலுகைகளுக்கு ஈடு கொடுக்க முடியாமல், பலத்த நஷ்டத்தினை கண்டது.
ஆனால் அந்த சமயத்தில் லாபத்தினை விட்டுக் கொடுத்திருந்தாலும் பரவாயில்லை, ஆனால் கையில் இருப்பதையும் இழந்தது. வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள லாபத்தினை மறந்து நஷ்டத்தினை கண்டது.
10 ஆண்டுகால அவகாசம்
இப்படி தொடர்ச்சியாக பின்னடைவையே சந்தித்து கொண்டிருந்த வோடபோனுக்கு, ஏஜிஆர் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் இன்னும் கொஞ்சம் பின்னடைவை சந்தித்தது. இதற்கிடையில் தான் அரசு உதவாவிட்டால், கடையை மூடுவதை தவிர வேறு வழியில்லை என்றும் கூறியது. ஆனால் இதற்கெல்லாம் பதிலளிக்கும் விதமாக கடந்த செவ்வாய்கிழமையன்று ஏஜிஆர் தொகையை செலுத்துவதற்கு 10 ஆண்டுகாலம் அவகாசம் அளித்தது உச்ச நீதிமன்றம்.
அமேசான், வெரிசோன் முதலீடா?
ஒரு புறம் இதுவே வோடபோன் ஐடியாவுக்கு கொண்டாட்டமாக இருந்தாலும், தற்போது அதனை இன்னும் இரட்டிப்பாக்கும் விதமாக ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் அமெரிக்காவின் வயர்லெஸ் கேரியர் நிறுவனமான Verizon Communications Inc நிறுவனமும், இதோடு அமேசான் நிறுவனமும் வோடபோனில் முதலீடு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
10% ஏற்றத்தில் வோடபோன் பங்கு விலை
இது குறித்து வெளியான மின்ட் செய்தியில் வெரிசோன் மற்றும் அமேசான் நிறுவனமும் இணைந்து, வோடபோன் நிறுவனத்தில் 4 பில்லியன் டாலர் முதலீடு செய்யலாம் என்றும் கூறப்படுகிறது. இது ஏற்கனவே பலத்த போராட்டத்திற்கு மத்தியில், போராடி வந்த வோடபோன் பங்கிற்கு புத்துயிர் அளித்துள்ளது எனலாம். ஏனெனில் தட தடவென 10% ஏற்றத்தில் காணப்படுகிறது.
நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பேச்சு வார்த்தை தொடங்கலாம்
வோடபோன் ஐடியா பங்கு விற்பனையானது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. ஆனால் அமேசானும் வெர்சோனும் நீதிமன்றத்தின் தீர்ப்பை தொடர்ந்து, தங்களது பேச்சு வார்த்தைகளை தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் வோடபோன் ஐடியாவோ அல்லது அமேசான் தரப்பிலோ இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.
நல்ல விஷயம் தான்
ஏற்கனவே பெரும் கடன் பிரச்சனையில் தத்தளித்து வரும் வோடபோன் நிறுவனத்திற்கு, உண்மையில் இது ஒரு நல்ல விஷயம் தான். அதே போல் ஏற்கனவே ஆன்லைன் சில்லறை விற்பனையில் இந்தியாவில் கொடி கட்டி பறந்து வரும் அமேசான் நிறுவனம், தற்போது வோடபோனில் முதலீடு செய்தால், தனது அடிப்படையை இந்தியாவில் இன்னும் வலுவாக அமைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் இது இந்திய நிறுவனமான ஜியோவுக்கு பலமான போட்டியாளர் தயாராகிக் கொண்டுள்ளார் எனலாம்.