அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் வெளிநாட்டவர்கள் அமெரிக்காவிற்கு வருகை தருவதை குறைக்கும் வகையில் பல்வேறு விசா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை அறிவித்த வண்ணம் இருக்கிறது. இந்த நிலையில் திடீரென அமெரிக்கா அரசாங்கம் 75 நாடுகளை சேர்ந்த குடிமக்களுக்கான அமெரிக்க குடியேற்ற விசா நடவடிக்கைகளுக்கு தடை விதித்து இருக்கிறது.
அதாவது அமெரிக்க அரசு பட்டியலிடப்பட்டுள்ள இந்த 75 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு அமெரிக்காவிற்கு வருகை தருவதற்கான விசா வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கு வருகை தரக்கூடிய வெளிநாட்டவர்கள் அமெரிக்கர்கள் செலுத்தக்கூடிய வரியின் மூலம் கிடைக்கும் பொதுநல திட்டங்களில் அதிகம் பயன் பெறுகிறார்கள் என்ற ஒரு குற்றச்சாட்டை டிரம்ப் நிர்வாகம் தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறது. இதனை அடுத்து தான் குடியேற்ற விசா வழங்குவதில் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருக்கிறது.

தற்போது 75 நாடுகளை சேர்ந்தவர்களுக்கான குடியேற்ற விசா செயலாக்கத்தை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் ஈரான் ,பாகிஸ்தான் ,இலங்கை ,வங்கதேசம், நேபாளம், ரஷ்யா உள்ளிட்ட முக்கிய நாடுகளும் இடம்பெற்றிருக்கின்றன. அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சகமே இதனை அதிகாரப்பூர்வமாக தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறது.
அதில் அமெரிக்க மக்களின் வரிப்பணத்தை அதிக அளவில் பெறக்கூடிய குடியேற்றவர்களை கொண்ட 75 நாடுகளில் இருந்து வரும் விசா விண்ணப்பங்கள் இடைநிறுத்தம் செய்யப்படுகின்றன என குறிப்பிடப்பட்டிருக்கிறது. அமெரிக்க மக்களின் செல்வத்தை இவர்கள் சுரண்ட மாட்டார்கள் என்பதை உறுதி செய்யும் வரை இந்த தடை என்பது தொடரும் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஜனவரி 21 ஆம் தேதியிலிருந்து இந்த விசா செயலாக்க தடை நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக அனைத்து நாடுகளிலும் இருக்கக்கூடிய அமெரிக்க தூதரகங்களுக்கும் கடிதம் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. பாகிஸ்தானுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வரும் சூழலிலும் பாகிஸ்தானையும் இந்த பட்டியலில் சேர்த்து இருப்பது தற்போது விவாதத்தை எழுப்பி இருக்கிறது. தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளும் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளது அதிர்ச்சியை தந்திருக்கிறது.
இந்த பட்டியலில் இந்தியாவின் பெயர் இல்லை. அமெரிக்க வெளியேறத் துறை அமைச்சகம் இந்த விசா நடைமுறைகளில் பெரிய மாற்றத்தை கொண்டு வர இருப்பதாகவும் அது முடிவடையும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் ஹெச்1பி உள்ளிட்ட விசாக்களுக்கு விண்ணப்பம் செய்யும் போது அவர்களின் சமூக வலைதள பக்கங்களையும் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஏராளமான இந்தியர்கள் ஹெச்1பி விசா கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அவசர வேலைக்காக தாயகம் வந்தவர்கள் கூட ரீ ஸ்டாம்பி செய்ய முடியாமல் அமெரிக்கா திரும்ப முடியாமல் இந்தியாவிலேயே தவிக்க கூடிய சூழலுக்கும் ஆளாகி இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications