இந்திய ஐடி ஊழியர்களுக்கு 2021 துவங்கியதில் இருந்து தொடர்ந்து பல சாதகமான அறிவிப்புகளும், சந்தை சூழ்நிலையும் உருவாகி வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது அமெரிக்க அரசு அறிவித்துள்ள முக்கியமான அறிவிப்பு தான் பல லட்சம் ஐடி ஊழியர்களுக்கு டென்ஷன் இல்லாமல் ஹெச்1பி விசா வாங்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொடுத்துள்ளது.
அமெரிக்க அரசு டிசம்பர் 22 முதல் ஹெச்1பி விசாவை சம்பளம் மற்றும் பதவி அடிப்படையில் அளிக்கும் டொனால்டு டிரம்ப் ஆட்சிக்கால கட்டுப்பாட்டை அதிகாரப்பூர்வமாக நீக்கிய நிலையில், இன்று பைடன் அரசு முக்கியமான தளர்வுகளை ஹெச்1பி விசா வழங்குவதில் அறிவித்துள்ளது.
அமெரிக்க அரசு
அமெரிக்க அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, 2022ஆம் ஆண்டு முழுவதும் ஹெச்1பி விசா மற்றும் இதர விசா விண்ணப்பதாரர்களுக்கான அமெரிக்கத் தூதரகத்தில் நேரில் நடக்கும் நேர்காணல்களை ரத்துச் செய்யத் தூதரக அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
நேரடி நேர்காணல்கள் ரத்து
அமெரிக்காவின் ஸ்டேட் டிபார்ட்மென்ட் வழங்கியுள்ள இப்புதிய தளர்வுகள் மூலம் விசா பெறுவதற்கான காலம் பெரிய அளவில் குறையும், கொரோனா கட்டுப்பாடு நடைமுறையில் இருக்கும் இந்த வேளையில் விசா பிராசஸ் செய்வதன் எண்ணிக்கை பெரிய அளவில் குறைந்துள்ள காரணத்தால் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்று
கொரோனா தொற்றுக்குப் பின்பு குளோபல் டிராவல் பிரிவு மீண்டும் வளர்ச்சி அடையத் துவங்கியுள்ள நிலையில் இந்த முக்கியமான தளர்வுகள் விசா காத்திருப்புக் காலத்தைக் குறைப்பதை மட்டும் அல்லாமல், விசா வழங்குவதை வேகப்படுத்தவும் முடியும். இதை ஐடி ஊழியர்களுக்கு ஜாக்பாட் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது.
120% சம்பள உயர்வு
2021 துவக்கம் முதல் திறன் வாய்ந்த ஐடி ஊழியர்களுக்கான டிமாண்ட் அதிகமாக இருக்கும் வேளையில் நிறுவனங்கள் 70 முதல் 120 சதவீதம் வரையில் சம்பள உயர்வைக் கொடுத்து, இது இந்திய ஐடி நிறுவனங்களில் எப்போதும் நடந்திடாத ஒன்று, அதேபோல் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் ஐடித் துறையில் உருவாகியுள்ளது ஐடி ஊழியர்களுக்குப் பொற்காலமாகவும் மாறியது.
போனஸ், பதவி உயர்வு
இதுமட்டும் அல்லாமல் சந்தையில் ஐடி ஊழியர்களுக்கான டிமாண்ட் அதிகமாக இருக்கும் காரணத்தால் ஊழியர்கள் வெளியேறும் விகிதம் அதிகமாக இருந்தது, இதைக் கட்டுப்படுத்த ஏற்கனவே நிறுவனத்தில் இருக்கும் ஐடி ஊழியர்களுக்குப் போனஸ், பதவி உயர்வு போன்றவை அள்ளிக்கொடுக்கப்பட்டது. இதேபோல் ஊழியர்களின் திறனை மேம்படுத்த ஐடி நிறுவனங்கள் அதிகப்படியான செலவுகளையும் செய்தது குறிப்பிடத்தக்கது.