அமெரிக்காவில் சென்று வேலை செய்யவும் படிக்கவும் தான் விசா கிடைக்கவில்லை என்றால் ஏற்கனவே விசா கிடைத்து அமெரிக்காவில் தங்கி இருப்பவர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற உதவும் கிரீன் கார்டு விண்ணப்பத்திற்கும் இந்தியர்கள் ஆயுள் முழுக்க காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நிரந்தர வசிப்பிட உரிமையை பெறுவதற்கு கிரீன் கார்டு பெற வேண்டும். இப்படி கிரீன் கார்டு பெற விண்ணப்பம் செய்தவர்களில் 70% பேர் இந்தியர்கள். அமெரிக்க கொள்கைக்கான தேசிய அறக்கட்டளை வெளியிட்ட தரவுகளில் அமெரிக்காவில் நிரந்தர குடியேற்றம் கோரி விண்ணப்பம் செய்தவர்களில் முதல் மூன்று நிலைகளில் காத்திருப்பவர்களில் சுமார் 79% பேர் இந்தியர்கள்.

தற்போது அமெரிக்காவில் வேலைவாய்ப்பு அடிப்படையிலான கிரீன் கார்டு வரிசையில் சிக்கியுள்ள இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 10 லட்சத்தை நெருங்கியுள்ளது என்கிறது. இதில் EB-2 பிரிவில் கிரீன் கார்டு பெற விண்ணப்பம் செய்தவர்கள் அதற்காக 179 ஆண்டுகள் காத்திருக்க வேண்டி இருக்குமாம்.
அதே போல EB-3 பிரிவில் கிரீன் கார்டு வேண்டி விண்ணப்பம் செய்பவர்களின் காத்திருக்கும் காலம் சுமார் 38 ஆண்டுகளாக உள்ளது. இவ்வகை விண்ணப்பங்களில் மொத்தமாக 12.64 லட்சம் விண்ணப்பங்கள் செயலாக்கம் செய்யாமல் காத்திருப்பில் உள்ளன.
ஹெச்1பி போன்ற விசாக்களில் அமெரிக்கா செல்லும் இந்தியர்கள் பெரும்பாலும் கிரீன் கார்டு விண்ணப்பம் செய்து அங்கே நிரந்தர குடிமக்களாகின்றனர். தற்போது அப்படி பல்வேறு விசாக்களில் அமெரிக்கா சென்ற சுமார் 10 லட்சம் இந்தியர்கள் எப்படியாவது நிரந்தர குடியுரிமை பெற விண்ணப்பம் செய்து தவமாய் தவகிருக்கின்றனர்.
2040க்குள் இந்த எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டும் என சொல்லப்படுகிறது. அமெரிக்கக் நாடாளுமன்றம் கடந்த 1990ஆம் ஆண்டு வேலைவாய்ப்பு சார்ந்த குடியேற்ற விசாக்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 1,40,000 ஆக நிர்ணயித்தது. இந்த வரம்பிற்குள் முதன்மை விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் அடங்குவர்.
இதனால் அதிக விண்ணப்பங்களை கொண்ட இந்தியா, சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். எனவே கிரீன் கார்டுக்காக நீண்ட காலம் காத்திருப்பது தனிநபர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் கடுமையான இன்னல்களை உருவாக்குகிறது. நிரந்தர வாழ்க்கை கிடைக்குமா இல்லையா என லட்சக்கணக்கான மக்கள் காத்திருக்கின்றனர்.
குறிப்பாக குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்துவிட்டு அவர்களின் எதிர்காலம் அமெரிக்காவில் அமையுமா அல்லது தாயகம் தான் செல்ல வேண்டுமா என்ற குழப்பத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். இந்த விசா பிரச்சினைகளை தீர்க்க டிரம்ப் நிர்வாகம் நடவடிகிகை எடுக்க வேண்டும் என்பதே பலரது கோரிக்கை.


Click it and Unblock the Notifications

