அமேசான், வால்மார்ட் போன்ற முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களின் சார்பாக அமெரிக்காவின் முன்னணி வர்த்தக அமைப்பு, ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மீதான அன்னிய முதலீட்டு விதிகளைக் கடுமையாக்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியாவில் வர்த்தகம் செய்யும் அமெரிக்காவின் முன்னணி ஈகாரமஸ் நிறுவனங்களான அமேசானின் இந்திய கிளையும், வால்மார்ட்-ன் பிளிப்கார்ட் நிறுவனமும் அன்னிய முதலீடுகளைக் கட்டுப்படுத்த கடுமையான அமைப்பை உருவாக்கியுள்ளது என வர்த்தகர்கள் குற்றம்சாட்டிய நிலையில் மத்திய அரசு இத்துறை மீதான அன்னிய முதலீட்டு விதிகளை மறுசீரமைப்புச் செய்யச் சில நாட்களுக்கு முன் கோரிக்கை விடுத்தது.
அன்னிய முதலீட்டு விதிகள்
இதைத் தொடர்ந்து அமெரிக்க லாபி குரூப் ஒன்று ஈகாமர்ஸ் நிறுவனங்கள் மீதான அன்னிய முதலீட்டு விதிகளைக் கடுமையாக்க வேண்டாம் எனக் கோரிக்கை விடுத்துள்ளது. இதேபோல் அமேசான் மற்றும் வால்மார்ட் நிறுவனங்கள் எவ்விதமான தவறும், விதிமீறல்களையும் இந்தியாவில் செய்யவில்லை எனத் தெரிவித்துள்ளது.
மார்கெட்பிளேஸ் சேவை
வெளிநாட்டு ஈகாமர்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் விற்பனையாளர்களையும், வாடிக்கையாளர்களையும் இணைக்கும் மார்கெட்பிளேஸ் சேவையை அளிக்க இந்திய அரசு அனுமதி அளிக்கிறது. இந்நிலையில் இந்திய வர்த்தகர்கள் அமேசான் மற்றும் வால்மார்ட் நிறுவனங்கள் குறிப்பிட்ட விற்பனையாளர்களை மட்டுமே தேர்வு செய்து அதிகளவிலான வர்த்தகத்தையும், தள்ளுபடிகளையும் அளித்து வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளனர்.
விற்பனையாளர்களுக்குப் பாதிப்பு
அமேசான் மற்றும் வால்மார்ட் போன்ற பெரும் நிறுவனங்கள் தங்களது கூட்டணி நிறுவனங்கள் அல்லது குறிப்பிட்ட விற்பனையாளர்களை மட்டுமே தேர்வு செய்து சலுகை அளிப்பதன் மூலம் இந்த ஈகாமர்ஸ் தளத்தில் இருக்கும் சிறு விற்பனையாளர்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
2018 கட்டுப்பாடு
2018ல் இந்தியாவில் இருக்கும் ஈகாமர்ஸ் நிறுவனங்களில் பங்குகளை வைத்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாகத் தத்தம் தளத்தில் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என இந்திய அரசு புதிய விதிமுறையை விதித்தது. இது ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்குப் பெருமளவிலான பாதிப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
புதிய விதிமுறை
தற்போது இந்தியாவில் இருக்கும் ஈகாமர்ஸ் நிறுவனங்களில் மறைமுகமாகப் பங்குகளை வைத்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாகத் தத்தம் தளத்தில் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என்ற புதிய கொள்கை மாற்றத்தை அறிவிக்கத் திட்டமிட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.