அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தொடர் விசா கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சுமார் 200,000 பேரின் விசாக்களை ரத்து செய்ய அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க வரலாற்றில் ஒரே நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான விசாக்கள் ரத்து செய்யப்படுவது வரலாற்றிலேயே இது தான் முதன்முறை என்கின்றனர் நிபுணர்கள். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் உள்நாட்டு பாதுகாப்புத்துறை ஆகியவை இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன. இதன்படி 2016 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் B1 வர்த்தக விசா மற்றும் B2 சுற்றுலா விசாக்களை பெற்றவர்கள், பின்னர் அமெரிக்காவில் தஞ்சம் கோரியிருந்தால் அல்லது தற்போது விண்ணப்பம் செய்திருந்தால் அவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படுமாம்.

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவிருக்கும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் டாமி பிகோட் அளித்த பேட்டியில் குறுகிய கால பயணிகளாக அமெரிக்காவிற்குள் நுழைந்துவிட்டு, பின்னர் இங்கு நிரந்தரமாக தங்குவதற்காக தஞ்சம் கோரி விண்ணப்பிக்கும் வெளிநாட்டினரை கண்டறிந்து, அவர்களின் Non-immigrant விசாக்களை ரத்து செய்ய உள்நாட்டு பாதுகாப்புத்துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என கூறியுள்ளார்.
ஒரே நாளில் 2 லட்சம் பேர் வெளியேற்றப்பட மாட்டார்கள், இது படிப்படியாக பல கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறையின் துணை செயலாளரான கிறிஸ்டோபர் லாண்டௌ சுற்றுலா என கூறிவிட்டு போலியாக பலர் அமெரிக்காவில் நுழைகின்றனர் அவர்களை தடுக்கவே இந்த நடவடிக்கை என கூறியுள்ளார். விசாக்கள் ரத்து செய்யப்பட்டாலும், உடனடியாக அவர்கள் நாடு கடத்தப்பட மாட்டார்கள் என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மாறாக, தஞ்சம் கோரி நிலுவையில் உள்ள பெரும்பாலான விண்ணப்பங்கள் மறுவகைப்படுத்தப்படும் . இதன் மூலம் சம்பந்தப்பட்ட நபர்கள் தங்களின் சுற்றுலா அல்லது வணிக பயணிகள் என்ற அந்தஸ்தை முழுமையாக இழப்பார்கள் என அதிகாரிகள் கூறுகின்றனர். அமெரிக்காவில் B1 விசா வணிக பயணங்களுக்காக வழங்கப்படுகிறது. B2 விசா சுற்றுலா, உறவினர்களை சந்திப்பது அல்லது மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக வழங்கப்படுகிறது.
தற்போது இந்த விசாக்களுக்கு புதியதாக விண்ணப்பம் செய்பவர்கள் , அமெரிக்காவில் தஞ்சம் கோர மாட்டோம் என்றும், சொந்த நாட்டிற்கு திரும்பிச் செல்வோம் என்றும் உறுதிமொழி பெற்று தான் விசாவே வழங்கப்படுகிறதாம். அமெரிக்க அரசு கடந்த 18 மாதங்களில் மட்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அல்லது தண்டனை பெற்றவர்களின் 175,000 விசாக்களை ரத்து செய்துள்ளது.
மதுபோதையில் வாகனம் ஓட்டுவது முதல் கொள்ளை, பாலியல் குற்றங்கள் போன்ற கடுமையான குற்றங்கள் வரை ஈடுபட்ட வெளிநாட்டவர்களை கண்டறிந்து அவர்களின் விசாக்களை ரத்து செய்கிறது. மேலும் மத்திய கிழக்கு நாடுகள் விவகாரத்தில் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராக பகிரங்கமாக குரல் கொடுத்தவர்களின் விசாக்களும் இதேபோல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் கூட இந்தியர்கள் சிலரும் அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டு இந்தியா திருப்பி அனுப்பப்பட்டனர். தற்போது அமெரிக்கா செல்ல விசா கிடைப்பதே குதிரை கொம்பாக இருக்கும் நிலையில் அவர்களை எப்படி நாட்டை விட்டு வெளியேற்றலாம் என கண்ணில் விளக்கெண்ணை ஊற்றி பார்க்கிறது அமெரிக்க அரசு. எனவே இந்தியர்கள் கவனமாக இருக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications

