ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யும் நாடுகளின் மீது 100% இறக்குமதி வரி விதிக்க வகை செய்யும் புதிய மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்தியா தனக்கு தேவையான பெரும்பகுதி கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து தான் வாங்குகிறது என்பதால் இந்த மசோதா இந்தியாவுக்கு புது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைன் மீதான போருக்காக ரஷ்யாவிற்கு நிதி கிடைப்பதை தடுக்கும் நோக்கில், இரு கட்சிகளின் ஆதரவுடன் செனட் சபையில் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்படி ரஷ்யாவின் கச்சா எண்ணெய் அல்லது இயற்கை எரிவாயுவை அதிகமாக இறக்குமதி செய்யும் உலகின் முதல் ஐந்து நாடுகளில் இருந்து வரும் இறக்குமதிகளுக்கு 100% வரி விதிக்கப்படும். அப்படி என்றால் சீனா, இந்தியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி மற்றும் அஜர்பைஜான் ஆகிய நாடுகள் இந்த வரி வரம்பிற்குள் வரும்.

இந்த மசோதாவிற்கு 'லிண்ட்சே ஓ. கிரஹாம் ரஷ்யா மீதான பொருளாதாரத் தடைகள் சட்டம் 2026' என பெயரிடப்பட்டுள்ளது. சுமார் 60-க்கும் மேற்பட்ட செனட் உறுப்பினர்கள் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயுவின் அளவு, ரஷ்யாவின் மொத்த எரிவாயு ஏற்றுமதியில் 15%க்கும் குறைவாக இருக்கும் மற்றும் அந்த இறக்குமதியை குறைக்கத் தீவிர நடவடிக்கைகளை எடுக்கும் நாடுகளுக்கு இந்த வரி விலக்கு அளிக்கப்படும். இது பல ஐரோப்பிய நாடுகளுக்கு பயனளிக்கும்.
ஆனால் இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கு இது சிக்கலை தான் தரும். இந்த மசோதா சட்டமானால், இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 100% வரி விதிக்கும். இது இந்திய ஏற்றுமதி துறைக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும். கடந்த ஆண்டு இப்படி தான் ரஷ்யா எண்ணெய் வாங்குவதற்காக இந்திய பொருட்களுக்கு 50% வரி விதித்து இடியை இறக்கியது அமெரிக்கா. அந்த பிரச்சினையில் இருந்தே இந்திய ஏற்றுமதியாளர்கள் இன்னும் வெளிவரவில்லை. இதில் 100% வரி என்றால் இன்னும் சிக்கல் தான் ஏற்படும்.
ஒவ்வொரு 180 நாட்களுக்கு ஒருமுறை, ரஷ்யாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்கும் நாடுகளின் பட்டியலை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி ஆய்வு செய்து, வரி விகிதங்களை மாற்றியமைப்பார் என்கிறது இந்த மசோதா. உக்ரைன் போரைத் தொடர்ந்து, ரஷ்யாவின் நிதி ஆதாரங்களை முடக்க அமெரிக்கா பல்வேறு தடைகளை விதித்து வருகிறது. தற்போதைய மசோதாவானது, ரஷ்யாவுக்கு கச்சா எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் நிதி ஆதாரத்தை குறி வைக்கிறது. அதன் மூலம் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா கூடுதல் அழுத்தம் தர திட்டமிடுகிறது. முதலில் இந்த மசோதாவில் 500% வரி விதிக்க திட்டமிடப்பட்டிருந்தது, தற்போது அது 100% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா நாடாளும்ன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு, அதிபரின் கையொப்பத்தை பெற்றால் மட்டுமே சட்டமாகும். டிரம்ப் நினைத்தால் இதில் மாற்றங்களை கொண்டு வரலாம். அமெரிக்காவே ஈரான் போர் காரணமாக இந்தியா , ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்க அனுமதி தந்துள்ளது. இந்நிலையில் அதனை கண்டித்து மசோதாவும் கொண்டு வருவது நியாயமில்லை என்கின்றனர் சர்வதேச அரசியல் நிபுணர்கள்.


Click it and Unblock the Notifications

