ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதை அடுத்து அமெரிக்கா ஈரான் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கிறது. இதனால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் உண்டாகி கோடிக்கணக்கான மக்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. பிப்ரவரி 28ஆம் தேதி ஈரானில் போர் தொடங்கியது. அப்போது இதே போல ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டு இரு தரப்பும் கடுமையான தாக்குதலை மேற்கொண்டன.
ஈரான் போர் இந்தியா உள்பட பல்வேறு நாடுகளிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக இந்தியாவில் எல்பிஜி கேஸ் தட்டுப்பாடு, கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு வித்திட்டது. இந்த பாதிப்பில் இருந்தே இந்தியா இன்னும் மீண்டு வரவில்லை. இதற்கிடையே இருநாடுகளும் சமாதானம் ஆகி பேச்சுவார்த்தை நடத்தி வந்த நிலையில் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாக மீண்டும் தாக்குதல்களை தொடங்கியுள்ளன.

கடந்த சில நாட்களாகவே ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்ற சைப்ரஸ் நாட்டுக்குச் சொந்தமான கப்பலை ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர காவல் படை தாக்கியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில் அமெரிக்க ராணுவம் மீண்டும் ஈரான் மீது குண்டுமழை பொழிய தொடங்கியுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு துறை அமைச்சர் பீட் ஹெக்செத் ஈரான் ஒரு தவறான முடிவை எடுத்துள்ளது. இப்போது அதற்கான விலையை அது கொடுக்கிறது என தெரிவித்துள்ளார். வணிக கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சுதந்திரமாக செல்வதை உறுதி செய்யவும், ஈரானின் தாக்குதல் திறனை குறைக்கவும் இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாக அமெரிக்கா விளக்கம் அளித்துள்ளது.

இதற்கிடையே மறு அறிவிப்பு வரும் வரை ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரானின் புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளதாக ஈரான் அரசு ஊடகம் தெரிவிக்கிறது. அங்கீகரிக்கப்படாத வழியை பயன்படுத்திய கப்பல் ஒன்றின் மீது தாங்கள் எச்சரிக்கை துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் ஈரான் கூறியுள்ளது.
அமெரிக்காவும் ஈரான் மிகவும் முரண்டு பிடித்த நிலையில் நட்பு நாடுகள் விடாப்பிடியாத இரு தரப்புக்கும் ஒப்பந்தம் கொண்டு வர செய்து பேச்சுவார்த்தை நடத்த செய்தன. 3 மாதங்களாக நீடித்த போருக்கு ஒரு தீர்வு வந்துவிட்டது இனி பெட்ரோல், டீசல் விலை குறையும் விலைவாசி குறையும் என இந்தியா உட்பட பல நாடுகளின் மக்களும் நிம்மதி அடைந்த நிலையில் இரு நாடுகளும், மீண்டும் பரஸ்பர தாக்குதலை தொடங்கியுள்ளன.
ஏற்கனவே இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளை இந்த தாக்குதல் மேலும் சிக்கலாக்கியுள்ளது. குறிப்பாக, ஹார்முஸ் ஜலசந்தியின் கட்டுப்பாட்டை யார் வைத்திருப்பது என்பதில் இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் நீடிக்கிறது. ஈரான் அந்த வழித்தடத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறது, ஆனால் அமெரிக்காவோ அந்த பகுதியில் தடையற்ற போக்குவரத்தை அனுமதிக்க விரும்புகிறது.ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்திற்கு தீர்வு காணும் வரை ஈரான் போருக்கு முடிவே இல்லை என்றே சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications

