இந்திய டெலிகாம் சந்தையில் கடந்த 4 வருடமாகப் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருவதற்கு முக்கியக் காரணமாக விளங்கும் ஜியோ, தற்போது ரீடைல் சந்தையில் ஜியோ உதவியுடன் மிகப்பெரிய அளவிலான வர்த்தகச் சந்தையைக் கைப்பற்ற முடிவு செய்து பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமாகத் திகழும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சில நாட்களுக்கு முன்பே பேஸ்புக் நிறுவனத்திடம் இருந்து 5.7 பில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்ற நிலையில் தற்போது அமெரிக்கத் தனியார் முதலீட்டு நிறுவனமான சில்வர் லேக் சுமார் 5,655.75 கோடி ரூபாய் (747 மில்லியன் டாலர்) முதலீடு செய்துள்ளது.
இந்த முதலீட்டு மூலம் சில்வர் லேக் ஜியோ நிறுவனத்தின் 1.15% பங்குகளைக் கைப்பற்றியுள்ளது. இந்த முதலீட்டின் மூலம் ஜியோ நிறுவனத்தின் மொத்த மதிப்பு 5.15 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
12.5 சதவீதம் வளர்ச்சி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் மற்றும் ஜியோ தளத்தில் அமெரிக்கத் தனியார் பங்கு முதலீடு நிறுவனமான சில்வர் லேக் சுமார் 5,655.75 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது. இந்த முதலீட்டின் படி ஜியோ தளத்தின் மொத்த பங்கு மதிப்பு 4.90 லட்சம் கோடி ரூபாயும், மொத்த நிறுவனத்தின் மதிப்பு 5.15 லட்சம் கோடி ரூபாய் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது.
ஏப்ரல் 22ஆம் தேதி பேஸ்புக் செய்த முதலீட்டுக்குப் பின் ஜியோவின் மொத்த பங்கு மதிப்பு 12.5 சதவீதம் உயர்ந்துள்ளது.
சில்வரே லேக்
தொழில்நுட்பம் மற்றும் நிதித்துறையில் சில்வர் லேக் பல்வேறு முதலீடுகளைச் செய்து இத்துறைகளில் முக்கியமான ஒரு நிறுவனமாக உள்ளது. இந்தியாவின் டிஜிட்டல் சமூக மாற்றத்தில் உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனங்களை இணைத்துக்கொள்ளும் போதும் பல வாய்ப்புகளை உருவாக்க முடியும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
மேம்பாடு
முகேஷ் அம்பானி தலைமையிலான ஜியோ மிகவும் குறுகிய காலகட்டத்திலேயே பிராண்ட்பேன்ட், ஸ்மார்ட் கருவிகள், கிளவுட் மற்றும் எட்ஜ் கம்பியூட்டிங், பிக் டேட்டா அனலிட்டிக்ஸ், செயற்கை நுண்ணறிவு, இண்டர்நெட் ஆப் திங்ஸ், Augmented மற்றும் Mixed Reality, பிளாக்செயின் எனப் பல்வேறு சேவைகளை உருவாக்கியுள்ளது.
தற்போது பேஸ்புக், சில்வர் லேக் போன்ற தொழில்நுட்ப முன்னோடி நிறுவனங்களின் கூட்டணி மூலம் ஜியோ உருவாக்கிய சேவைகளின் தரத்தை மேம்படுத்தி அதிக மக்களிடம் எளிதாகக் கொண்டு சேர்க்க முடியும்.
40 பில்லியன் டாலர்
சில்வர் லேக் நிறுவனம் சுமார் 40 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது. இதில் மிக முக்கியமாக ஏர்பிஎன்பி, அலிபாபா, ஆன்ட் பைனான்சியல், ஆல்பபெட் வெரிலி, வேய்மோ, டெல், டிவிட்டர் எனப் பல்வேறு பெரு தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளது.