டெல்லி: முதன் முதலாக சீனாவில் பரவிய கொரோனாவின் கோரத் தாண்டவம், இன்று உலகின் பல நாடுகளிலும் தலைவிரித்து ஆடி வருகிறது. ஏற்கனவே இந்த வைரஸ் பல ஆயிரம் மக்களை பலி கொண்டுள்ளது. இன்னும் எத்தனை பேர் பலி கொள்ளும் என்பதும் மக்களிடையே பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கொரோனா பற்றிய பல்வேறு வதந்திகளும் பரவி வரும் நிலையில், இது ஒரு பயோ வார் என்றெல்லாம் கூறப்படுகிறது. இப்படி ஒரு நிலையில் இதற்கான மருந்தும் செயல்பாட்டு வரவில்லை.
இந்த நிலையில் உலகின் வல்லரசு நாடே இந்த வைரஸினால் அரண்டு போயுள்ளது. தற்போது வரையில் 3 லட்சம் பேருக்கு மேல் தாக்கம் அடைந்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
அதிரடி நடவடிக்கை
இது இப்படி எனில் மறுபுறம் அந்த நாட்டு மக்களை எப்படியேனும் இந்த பேரழிவிலிருந்து காப்பாற்ற வேண்டும் என அந்த நாட்டின் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறார். இந்த நிலையில் அடுத்த இரண்டு வாரங்களில் நினைத்துக் கூட பார்த்திராத வகையில் பலி எண்ணிக்கை உயரலாம் எனவும் டிரம்ப் கூறியுள்ளார்.
ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்
இந்த நிலையில் கடந்த சனிக்கிழமையன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தான் கலந்துரையாடியதாக கூறியுள்ளார். மேலும் கொரோனாவை ஒழிப்பதில் இரு நாடுகளும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்தியாவிடம் ஆர்டர்
மேலும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உயிர் காக்கும் மருந்தாக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் இருக்கிறது. இந்த மாத்திரைகளை அமெரிக்க மிக அதிக அளவி்ல இந்தியாவிடம் ஆர்டர் செய்திருந்தது. ஆனால் தற்போது இந்தியாவில் வேகமேடுத்துள்ள கொரோனாவினால், இந்தியாவில் குறிப்பிட்ட மருந்து வகைகள் ஏற்றுமதிக்கு தடை செய்துள்ளது.
ஏற்றுமதி தடை
இந்த நேரத்தில் அமெரிக்கா உயிர் காக்கும் மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஆர்டர் செய்திருந்த நிலையில், இந்தியாவில் ஏற்றுமதி செய்ய தடை விதித்துள்ளதால், அமெரிக்காவுக்கு அந்த மருந்து கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே டொனால்டு டிரம்ப் அந்த தடையை எங்களுக்காக தளர்த்தி மாத்திரைகள் கிடைக்க உதவுமாறும், அதற்கு பிரதமர் மோடியும் பரிசீலிப்பதாகத் தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் பயன் அளிக்கிறது
அமெரிக்க மருத்துவர்களும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உயிரைக்காக்க ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மாத்திரைகளை பயன்படுத்தலாம் எனத் தெரிவித்துள்ளது. இந்த மாத்திரைகளும் நன்றாகப் பயன் அளிப்பதாக அமெரிக்கா ஜனாதிபதி டிரம்பும் சமீபத்தில் ஒர் அறிக்கையில் கூறி இருந்தார். இப்படி ஓரு நிலையில் தான் தற்போது இந்தியாவினை நாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.