டெல்லி: ஈரானில் இருந்து பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்த, இந்திய நிறுவனத்திற்கு அமெரிக்க தடை விதித்துள்ளது.
இது குறித்து அமெரிக்க கருவூலத் துறை வெளிட்டுள்ள செய்தி அறிக்கையில், இந்திய நிறுவனம் உள்பட சர்வதேச அளவிலான பல நிறுவனங்கள், ஈரானின் டிரைலையன்ஸ் மூலம் மில்லியன் டாலர் மதிப்பிலான பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்துள்ளது.
குறிப்பாக மெத்தனால் மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பெட்ரோலியம் சார்ந்த பொருட்களை வாங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்திய நிறுவனத்திற்கு தடை
இந்தியாவினை சேர்ந்த பெட்ரோ கெமிக்கல் நிறுவனமான திபால்ஜி பெட்ரகெம் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதனுடன் ஐக்கிய அரபு அமீரக நிறுவனம், ஹாங்காங்கில் உள்ள சில நிறுவனங்கள் என பலவும் அமெரிக்காவின் தடை பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
ஈரான் உடனான எண்ணெய் வணிகத்தினை இந்தியா கடந்த 2019ம் ஆண்டில் நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஈரான் - அமெரிக்கா பிரச்சனை
இது அமெரிக்காவின் முன்னாள் அதிபரான டொனால்டு டிரம்ப் ஈரான் மீது பொருளாதார தடை விதிருந்த நிலையில், ஈரானுடன் வணிகம் செய்யும் நாடுகள் நிறுவனங்கள் மீதும் தடை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தார். இது அமெரிக்கா அணு ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியதில் இருந்தே, இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் போக்கு நிலவி வந்தது.
சவுதியிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா
அமெரிக்காவின் தடைக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில், இந்தியாவும் ஈரானுடனான எண்ணெய் வணிகத்தினை நிறுத்தியது. அதன் பிறகு சவுதியிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கி வந்தது. தற்போது ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், ரஷ்யாவிடம் இருந்து சலுகை விலையில் எண்ணெய் வாங்கி வருகின்றது.
சட்ட விரோத நடவடிக்கை
எனினும் இது குறித்து சம்பந்தப்பட்ட நிறுவனமோ, வெளியுறவுத் துறை அமைச்சகமோ எந்த அறிவிப்பினையும் வெளியிடவில்லை. இந்திய நிறுவனத்தின் வணிகம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என ஈரானும் பதில் கூறியுள்ளது.
எனினும் இது குறித்து உயர்மட்ட அதிகாரிகள் தரப்பில் அமெரிக்காவின் நடவடிக்கை, விரோதமானது என்றும், பொருளாதார தடைகள் சட்ட விரோதம் என்று கூறியது.
அமெரிக்காவின் திட்டம்
ஈரானின் சட்டவிரோத எண்ணெய் மற்றும் பெட்ரோ கெமிக்கல் விற்பனையை கட்டுபடுத்துவதற்கு அமெரிக்கா உறுதி பூண்டுள்ளதாகவும், அதன் ஒரு பகுதியாக அமெரிக்க இத்தகைய நடவடிக்கையினை எடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.