ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைன் மீதான போரை அறிவித்து 2வது நாளான இன்று தொடர்ந்து முன்னேறி வரும் நிலையில், உக்ரைன் அரசு தன் நாட்டு மக்களின் கையில் ஆயுதங்களைக் கொடுத்துப் போர் செய்யத் துவங்கியுள்ளது. இதற்கிடையில் உக்ரைன் நாட்டின் சில முக்கியப் பகுதிகளில் உக்ரைன் ராணுவத்துடன் நேட்டோ படைகள் பாதுகாத்து வருகிறது.
இந்நிலையில் உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால்,ரஷ்யா மீது உக்ரைன் ஆதரவு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பா ஆகியவை அடுத்தடுத்து கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இதன் மூலம் எந்த நாடுகள் என்ன கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தெரியுமா..?
ஜோ பைடன்
அமெரிக்கா ஏற்கனவே சில தடைகளை விதித்துள்ள நிலையில் இன்று கடுமையான மற்றும் புதிய கட்டுப்பாடுகளை விதிக்க உள்ளதாக, ரஷ்யாவைக் கடுமையாக விமர்சனம் செய்து அமெரிக்க அதிபரான ஜோ பைடன் புதிய தடைகளை விதித்துள்ளார். இந்தத் தடைகள் மூலம் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்குப் பாதிப்பு குறையும் எனவும் பைடன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா
ரஷ்யாவின் VTB, SberBank, Bank Otkritie, Sovcombank OJSC மற்றும் Novikombank ஆகிய வங்கிகளுடன் எவ்விதமான வர்த்தகத்தையும் செய்யக் கூடாது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் ரஷ்யாவில் உள்ள 13 பெரிய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுடன் எவ்விதமான பரிவர்த்தனையும் செய்யக் கூடாது. மேலும் இந்தப் பொருளாதாரத் தடைகள் ரஷ்ய நாட்டின் பணக்காரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 24 பெலாரஷ்ய நபர்களுக்கும் நீட்டிக்கப்பட்டது.
அமெரிக்கா - இந்தியா
மேலும் ரஷ்யா டிபென்ஸ், ஏவியேஷன், கடற்படை சார்ந்த தொழில்நுட்பத்தைப் பிற நாட்டில் இருந்து இறக்குமதி செய்யத் தடை விதித்துள்ளது அமெரிக்க அரசு. மேலும் இந்தத் தடை உத்தரவை 27 ஐரோப்பிய நாடுகள், பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் ஆலோசனை செய்த பின்பு தடை விதித்துள்ளது. மேலும் இந்தியா உடன் ஆலோசனை செய்து வருகிறோம் எனப் பைடன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன்
அமெரிக்காவைத் தொடர்ந்து பிரிட்டன் வெளியிட்டுள்ள தடை உத்தரவில், ரஷ்ய வங்கியான VTB மற்றும் ஆயுத உற்பத்தியாளர் Rostec இன் சொத்துக்களை முடக்கம், புட்டினுக்கு நெருக்கமான அவரது முன்னாள் மருமகன் கிரில் ஷமலோவ் உட்பட ஐந்து பேர் மீது தடை விதித்துள்ளது.
பிரிட்டிஷ் வான்வெளி
இதேபோல் பிரிட்டிஷ் வான்வெளியில் Aeroflot-ஐ தடை, லண்டனில் ரஷ்ய அரசு மற்றும் நிறுவனங்கள் பணம் திரட்டுவதற்குத் தடை, இராணுவ பயன்பாடுகளைக் கொண்ட "இரட்டை-பயன்பாட்டு" உபகரணங்களை ஏற்றுமதி செய்யத் தடை செய்ய உள்ளதாகப் போரிஸ் ஜான்சன் தலைமையிலான பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.
போரிஸ் ஜான்சன்
மோலும் இங்கிலாந்து வங்கிகளில் கணக்குகளை வைத்துள்ள ரஷ்யர்கள் எவ்வளவு பணம் வைத்திருக்க முடியும் என்பதைக் கட்டுப்படுத்தவும் புதிய சட்டம் இயற்றப்படும் எனத் தெரிவித்துள்ளார். இது பிரிட்டன், ரஷ்யா மீது விதிக்கும் கடுமையான தடையாக இருக்கும் எனத் தெரிவித்தார் போரிஸ்.
ஐரோப்பிய யூனியன்
ஐரோப்பிய யூனியன் தலைவரான உர்சுலா வான் டெர் லேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் ரஷ்யா மீது நிதியியல், எனர்ஜி மற்றும் டெக்னாலஜி ஆகிய 3 பிரிவுகளில் தடை விதிக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளார்.
வங்கி சேவை
ரஷ்ய வங்கிச் சந்தையில் 70% மற்றும் முக்கிய அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் மீது நிதியியல் சேவை தடை விதிக்கப்பட உள்ளது. கச்சா எண்ணெய் துறை சார்ந்த அனைத்து ஏற்றுமதிகளையும் ரஷ்யா மீது தடை செய்யப்பட உள்ளது. இதன் மூலம் ரஷ்யா தனது சுத்திகரிப்பு ஆலையை மேம்படுத்த முடியாது.
விசா தடை
ரஷ்ய விமானச் சேவை நிறுவனத்திற்கு விமானங்கள், உபகரணங்கள் விற்பனை செய்யத் தடை. செமிகண்டக்டர் மற்றும் முக்கியத் தொழில்நுட்பம் சார்ந்த அனைத்தும் ரஷ்யாவுக்கு அளிக்கத் தடை, அறிஞர்கள், வர்த்தகர்கள் இனி ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குள் வர தடை.