பாகிஸ்தான் பொருளாதாரச் சரிவிலும், நிதி நெருக்கடியிலும் மோசமாகப் பாதிக்கப்பட்டு இருப்பது அனைவருக்கும் தெரியும், இந்த நிலையில் நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வரும் நோக்கத்துடன் ஐஎம்எப், சீனா, சவுதி அரேபியா உடன் அதிகப்படியான கடனை வாங்கியது.
இதனால் பாகிஸ்தான் சீனா கடன் வலையில் சிக்குவதாகப் பலரும் விமர்சனம் செய்து வரும் நிலையில், பாகிஸ்தான் பொருளாதாரத்தைப் பதம் பார்த்து வரும் எரிபொருள் விலையைக் குறைக்கும் முயற்சியில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது.
இந்த முயற்சியில் தற்போது பாகிஸ்தான் - அமெரிக்கா மத்தியில் புதிய பிரச்சனை உருவாகியுள்ளது.
பாகிஸ்தான்
பாகிஸ்தான் நாட்டின் நிதியமைச்சராக இருக்கும் இஷாக் தர் நியமிக்கப்பட்ட நாளில் இருந்து பாகிஸ்தான் நாட்டின் நிதியியல் மற்றும் வர்த்தகச் சந்தையில் பல மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. இது நாட்டு மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்றுள்ளது.
சீனா, சவுதி அரேபியா
குறிப்பாகச் சீனா, சவுதி அரேபியாவிடம் இருந்து நிதியுதவி பெற்றது பாகிஸ்தானைத் திவால் ஆவதில் இருந்து தப்பிக்க வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் பணவீக்க உயர்வுக்கும், ரூபாய் மதிப்பு சரிவுக்கும் முக்கியக் காரணமாக இருக்கும் கச்சா எண்ணெய்-ஐ ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்ய முயற்சி செய்து வருகிறது.
நிதியமைச்சர் இஷாக் தர்
சில வாரங்களுக்கு முன்பு பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர் நாட்டில் நிலவும் எரிபொருள் பற்றாக்குறையைக் குறைக்க இந்தியாவைப் போல் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யத் திட்டமிட்டு உள்ளதாக அறிவித்தார்.
பொருளாதார மற்றும் வர்த்தகம்
இதனால் அடுத்தச் சில மாதத்தில் நாட்டின் பொருளாதார மற்றும் வர்த்தக நிலையை மாற்ற முடியும் எனத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர் ரஷ்யாவிடம் வாங்கப்படும் கச்சா எண்ணெய் இந்தியாவுக்கு அளிக்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கே பாகிஸ்தானும் வாங்கும் என அறிவித்தார்.
ரஷ்யா
அதாவது ரஷ்யா தற்போது இந்தியாவில் சர்வதேச சந்தை விலையைக் காட்டிலும் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்து வருகிறது, இதேபோல் பாகிஸ்தானும் தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்க திட்டமிட்டு வருவதாக அறிவித்தார் இஷாக் தர்.
அமெரிக்கா, ஐரோப்பா தடை
ஆனால் ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பா தடைவிதித்துள்ளதால் அதன் நடப்பு நாடுகள் அனைத்தும் ரஷ்யா உடனான வரத்தகத்தை நிறுத்திய வேளையில் பாகிஸ்தான் நிலைப்பாடு முக்கியமான கேள்வியாக உள்ளது. இதற்கு இஷாக் தர் துபாயில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய போது முக்கியமான விஷயத்தைத் தெரிவித்தார்.
தடுக்க முடியாது
ரஷ்யாவிடம் இருந்து பாகிஸ்தான் கச்சா எண்ணெய் வாங்குவதை அமெரிக்காவோ அல்லது ஐரோப்பாவோ தடுக்க முடியாது. ரஷ்யா மீது தடை விதிக்கப்பட்ட இத நேரத்தில் தான் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது.
அமெரிக்கப் பயணம்
மேலும் இஷாக் தர் செப்டம்பர் மாதம் அமெரிக்காவிற்கு மேற்கொண்ட பயணத்தின் போது அமெரிக்க அதிகாரிகளிடம் ரஷ்யாவிடம் இருந்து எங்களுடைய அண்டை நாடான இந்தியா இறக்குமதி செய்யும் போது நாங்கள் ஏன் செய்யக் கூடாது, இதை அமெரிக்கா தடுக்கவும் முடியாது எனத் தெரிவித்தாகத் துபாய்ச் செய்தியாளர்கள் சந்திப்பில் பாகிஸ்தான் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார் இஷாக் தர்.