அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியானதில் இருந்து தொடர் சரிவை பதிவு செய்து வருகிறது அதானி குழும பங்குகள்.
ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு அதானி குழுமம் 413 பக்க விளக்க அறிக்கையைச் சமர்ப்பித்தாலும் ஹிண்டன்பர்க் சில மணிநேரத்தில் பல முக்கியமான கேள்விக்குப் பதில் அளிக்கவில்லை என லிஸ்ட் போட்ட நிலையில் முதலீட்டாளர்கள் மத்தியில் சலசலப்பு உருவானது.
இந்த நிலையில் தான் கௌதம் அதானி தலைமையிலான அதானி எண்டர்பிரைசர்ஸ் தனது 20000 கோடி ரூபாய் மதிப்பிலான FPO திட்டத்தை ரத்து செய்தது. இந்தத் தாக்கம் குறைவதற்குள் சிட்டி குரூப் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
சிட்டிகுரூப்
அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் பல்வேறு நிதி சேவைகளை அளித்து வரும் Citigroup நிறுவனத்தின் வெல்த் பிரிவு மார்ஜின் கடன்களுக்குக் கௌதம் அதானியின் குழும நிறுவனங்களின் பத்திரங்களைப் பிணையமாக ஏற்றுக்கொள்வதை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
ஹிண்டன்பர்க் ரிசர்ச்
ஷார்ட் செல்லர் மற்றும் நிதி முறைகேடுகளைக் கண்டுபிடித்து அதன் மூலம் ஷார்ட் பொசிஷன் எடுத்து முதலீடு செய்யும் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பின், அதானி குழுமம் மீதான மோசடி குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து சர்வதேச வங்கிகள் அதானி குழுமத்தின் நிதிகளை ஆய்வு செய்யத் தொடங்கியது.
கிரெடிட் சூசி
இதன் வாயிலாக இன்று காலையில் சுவிஸ் நிதி நிறுவனமான கிரெடிட் சூசி தனது தனியார் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மார்ஜின் லோன் வழங்குவதற்கு அதானி குரூப் நிறுவனங்களின் பத்திரங்களைக் கோலேட்ரல் ஆகப் பெறுவதை நிறுத்தியுள்ளதாக அறிவித்தது. இதைத் தொடர்ந்து தற்போது சிட்டி குரூப் இதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
சிட்டி குரூப் மெமோ
கடந்த சில நாட்களில், அதானி குழுமம் வழங்கிய செக்யூரிட்டிகளின் மதிப்பு அதிர்ச்சி அளிக்கும் வகையில் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதேபோல் அதானி குழுமத்தின் நிதி ஆரோக்கியம் பற்றிய எதிர்மறையான தகவல்கள் தொடர்ந்து பங்குகள் மற்றும் பத்திரங்களின் மதிப்பு குறைந்துள்ளது எனச் சிட்டி குரூப் தனது நிறுவனத்திற்குள் அனுப்பிய மெமோ-வில் தெரிவித்துள்ளது.
பத்திரங்களின் மதிப்பு
இதேபோல் அதானி குழுமம் வழங்கிய அனைத்து பத்திரங்களுக்கும் lending value உடனடியாக நீக்கப்பட உள்ளதாகவும், அதை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வர உள்ளது. கடன் மதிப்பை நீக்க முடிவு செய்வது மூலம் மார்ஜின் லென்டிங் பரிவின் வர்த்தகப் பாதிப்பை குறைக்க முடியும் என நம்புவதாகச் சிட்டி குரூப் அனுப்பிய மெமோ-வில் இருந்ததாக ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.
100 பில்லியன் டாலர் இழப்பு
ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கை வெளியானதில் இருந்து இன்று வரையில் அதானி குழுமம் ஒட்டுமொத்த சந்தை மூலதன மதிப்பில் சுமார் 100 பில்லியன் டாலரை இழந்துள்ளது. இதே வேளையில் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி சொத்து மதிப்பிலும் சரிவை கண்டுள்ளது.
16வது இடம்
கடந்த ஒரு வாரத்தில் கௌதம் அதானியின் சொத்து மதிப்பு 44 பில்லியன் டாலர் சரிந்தது. இது மட்டும் அல்லாமல் கடந்த 24 மணிநேரத்தில் கௌதம் அதானி 23.4 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்துள்ளார். இதன் மூலம் போர்ப்ஸ் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 65.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் 16வது இடத்திற்குத் தள்ளப்பட்டார் கௌதம் அதானி.