அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் தனது பென்ச்மார்க் வட்டி விகிதத்தை நாணய கொள்கை கூட்டத்தின் முடிவில் 75 அடிப்படை புள்ளி உயர்த்தி 1.5-1.75 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இது ஏறக்குறைய 30 வருடங்களில் அறிவிக்கப்பட்ட அதிகப்படியான உயர்வாகும். அமெரிக்காவின் ரீடைல் பணவீக்கம் யாரும் எதிர்பார்க்காத வகையில் 40 வருட உச்சத்தை எட்டிய நிலையில், இதைக் கட்டாயம் கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தடாலடியாக வட்டி விகிதத்தை 0.75 சதவீதம் அதிகரித்தது.
இதனால் இந்தியாவுக்கு என்ன பாதிப்பு என்பதைத் தான் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்.
அமெரிக்க மத்திய வங்கி
அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி உயர்வு மூலம் இந்தியாவில் பணவீக்கம் பற்றிய கவலைகளை அதிகரித்துள்ளது. அமெரிக்கா தனது வட்டி விகிதத்தை உயர்த்திய காரணத்தால் பொருளாதாரம் மந்தமாக இருக்கும் இந்தச் சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் அனைவரும் தங்களது முதலீட்டைப் பாதுகாப்பான அரசு பத்திரத்தில் முதலீடு செய்வார்கள்.
அன்னிய முதலீடுகள்
இதன் அடிப்படையில் இந்தியப் பங்குச்சந்தை, வர்த்தகச் சந்தையில் இருக்கும் முதலீடுகள் அடுத்தடுத்து வெளியேறத் துவங்கும். இதனால் இந்தியாவின் அன்னிய செலாவணி குறைந்து ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடையும்.
இறக்குமதி பொருட்கள்
இதனால் இந்தியா இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கு டாலரில் பணம் செலுத்தப்படும் நிலையில் கூடுதலான தொகை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உருவாகும். இதனால் இந்தியாவுக்கு வரும் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களின் விலையும் அதிகரிக்கும். குறிப்பாகக் கச்சா எண்ணெய், தங்கம், நிலக்கரி, உற்பத்திக்கான மூலப்பொருட்கள் எனச் சகலமும் உயரும்.
கச்சா எண்ணெய், நிலக்கரி
கச்சா எண்ணெய், நிலக்கரி விலை உயர்ந்தாலே பெட்ரோல், டீசல், மின்சாரம் விலை உயர்ந்து நுகர்வோர் சந்தையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த விலைவாசி உயர்வால் நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கும், ரூபாய் மதிப்பு சரிவதால் நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறையும் அதிகரிக்கும்.
இந்திய ரூபாய் மதிப்பு
புதன்கிழமை வர்த்தக முடிவில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 78.28 ஆக வரலாற்றுச் சரிவைச் சந்தித்துள்ளது. இதே வேளையில் மே மாதம் பணவீக்கம் இந்தியாவில் 7.04 சதவீதமாக இருந்த நிலையில் அமெரிக்காவில் 8.6 சதவீதம் என்ற 40 சதவீத உச்சத்தைத் தொட்டது.
2 லட்சம் கோடி ரூபாய்
2022 ஆம் ஆண்டு மட்டும் இந்திய சந்தையில் இருந்து சுமார் 2 லட்சம் கோடி ரூபாய் அளவிலான அன்னிய முதலீடுகள் வெளியேறியுள்ளது. இதில் 1.9 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் பங்குச்சந்தையில் இருந்து மட்டுமே வெளியேறியுள்ளது. இதற்கு முன்பு அதிகப்படியாக 2018ல் 80,917 கோடி ரூபாய் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.