அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றிய நாளில் இருந்து விசா மற்றும் கிரீன்கார்டு வழங்குவதில் இருக்கும் பல கட்டுப்பாடுகளை நீக்கியது மட்டும் அல்லாமல் அமெரிக்கப் பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தையைக் கட்டமைக்கும் வெளிநாட்டவர்களுக்குக் கூடுதலான தளர்வுகளை அளித்துள்ளார்.
இந்நிலையில் விலைவாசி உயர்வாலும், பணவீக்க பாதிப்பாலும் அமெரிக்கப் பொருளாதாரம் மந்த நிலைக்குச் செல்லும் நிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் அந்நாட்டு வர்த்தகச் சந்தைக்கு வலு சேர்க்கும் விதமாக ஹெச்1பி விசா மற்றும் கிரீன்கார்டு வழங்குவதில் முக்கியமான மாற்றத்தைக் கொண்டு வர முடிவு செய்துள்ளது அமெரிக்காவின் ஹோம்லேண்டு செக்யூரிட்டி துறை.
ஹோம்லேண்டு செக்யூரிட்டி
அமெரிக்காவின் ஹோம்லேண்டு செக்யூரிட்டி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ஸ்பிரிங் 2022 அஜெண்ட-வில் அந்நாட்டின் ஹெச்1பி திட்டத்தைக் கூடுதலாக மார்டனாக மாற்ற திட்டமிட்டு உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் முக்கியமாக ஸ்டார்ட்அப் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு அதிகப்படியான தள்ளுபடிகளை அறிவிக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்
அமெரிக்காவில் இயங்கி வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எளிதாக வெளிநாட்டு ஊழியர்களைப் பணியில் சேர்க்க தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாற்றம் மூலம் வேகமாகவும், எவ்விதமான மோசடிகள் செய்யாமல் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களைப் பணியில் அமர்த்திக்கொள்ள முடியும்.
I-485 படிவம்
இத்திட்டத்தின் படி புதிய மாற்றமாக ஹோம்லேண்டு செக்யூரிட்டி I-485 படிவத்தைச் சமர்ப்பித்துத் தங்களது கிரீன்கார்டு பெறும் ஸ்டேட்டஸ்-ஐ மேம்படுத்திக்கொள்ளும் பணிகளை மேம்படுத்தத் திட்டமிட்டு உள்ளது. இதனால் கிரீன்கார்டு பெறுபவர்களின் காத்திருப்புக் காலம் கணிசமாகக் குறைய வாய்ப்பு உள்ளது.
ஸ்டேட்டஸ் அப்டேட்
இந்த I-485 படிவும் மூலம் H1B விசா கொண்டு அந்நாட்டில் பணியாற்றும் வெளிநாட்டவர் கிரீன் கார்டு அதாவது அமெரிக்கக் குடியுரிமை பெற்ற விண்ணப்பம் செய்திருந்தால் இந்தப் படிவத்தைச் சமர்ப்பித்து தங்களது ஸ்ட்டேட்டஸ்-ஐ மேம்படுத்திக்கொள்ள முடியும்.
வெளிநாட்டு ஊழியர்கள்
இதோடு வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பான பல மாற்றங்கள் கொண்ட அறிக்கை ஒப்புதலுக்காகச் சமர்ப்பித்துள்ளது. விரைவில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது, அமெரிக்க அரசு அந்த முறை அறிவித்துள்ள பெரும்பாலான சீர்திருத்தங்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்களைச் சார்ந்துள்ளது.
இந்தியர்களுக்கு ஜாக்பாட்
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எளிதாக வெளிநாட்டு ஊழியர்களைப் பணியில் சேர்க்கத் தளர்வுகள் அறிவிக்கப்படுவதால் இந்தியர்களுக்கு, இந்திய மாணவர்களுக்கும் அதிகப்படியான வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.